Take a fresh look at your lifestyle.

‘முரட்டுக்காளை’ ரயில் சண்டை காட்சி படமான விதம்!

மனம் திறக்கும் ரஜினி

தமிழ்த் திரை உலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த படம் ‘முரட்டுக்காளை’. சிவாஜி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை சினிமாவில் அறிமுகம் செய்த ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம்.

பல ஆண்டுகள் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏவிஎம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 80-களில் இந்தப் படம் மூலம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியது.

ரஜினிகாந்த் ஹீரோ. ரதி, சுமலதா, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கதாநாயகன் வேடங்களில் கலக்கி வந்த ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர், முரட்டுக்காளையில் தான் முதன்முதலாக வில்லன் வேடத்தில் தோன்றினார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.

இந்தப் படத்தில், கிளைமாக்சுக்கு முன்னதாக இடம்பெறும் ரயில் சண்டைக் காட்சி அன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த  தகவல்.

“சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர், முரட்டுக்காளை திரைப்படத்தின் மூலமாக ஏ.வி.எம் நிறுவனம் சினிமா உலகில் ரீ-என்ட்ரி கொடுத்தனர்.

படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். படத்தில் ஒரு ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றது.

அந்த சண்டைக் காட்சியைப் பெரிய அளவில் எடுக்க வேண்டும் என்பது ஏவிஎம்மின் திட்டம். வெளிநாடு அல்லது பாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்து வர வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனத்தினர் நினைத்தனர்.

ஆனால், ஸ்டண்ட் மாஸ்டர்  ஜூடோ ரத்தினத்திற்கும், எஸ்.பி. முத்துராமனுக்கும் இதில் உடன்பாடு கிடையாது.

முழு படத்தின் சண்டைக் காட்சிகளையும் நாம் செய்து விட்டு, ஒரே ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் வெளியே இருந்து ஆட்களை அழைத்து வந்தால் நமக்கு அவமானமாக இருக்கும் என்று இருவரும் கருதினர்.

இதனை ஒரு சவாலாக ஏற்று ஜூடோ ரத்தினம் செய்யலாம் என்று முடிவு செய்தார் இயக்குநர்.

இப்போது இருப்பது போல் அப்போது, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ரோப் வசதிகள் எதுவும் இல்லை. இருந்தும் உயிரைப் பணயம் வைத்து அந்த சண்டைக் காட்சியை ஓடும் ரயிலில் படமாக்கினோம்.

தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் அந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இது குறித்து சில கூடுதல் தகவல்கள்:

செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் ரயில் பாதையில் இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. படம் ஆரம்பிக்கும்போது உயிருடன் இருந்த தயாரிப்பாளர் மெய்யப்ப செட்டியார், படம் ரிலீஸ் ஆகும் போது அமரர் ஆகி இருந்தார்.

– பாப்பாங்குளம் பாரதி.