கடந்த 1989 தீபாவளிக்கு வெளியான மாப்பிள்ளை, வெற்றிவிழா, வாத்தியார் வீட்டு பிள்ளை படங்களோடு வெளியாகி சத்தமே இல்லாமல் பெரிய வெற்றி பெற்ற படம் புதுப்புது அர்த்தங்கள்.
இந்த படத்தின் மூலக்கதை இயக்குனர் ஸ்ரீதரின் வலதுகரமாய் விளங்கிய கதாசிரியர், இயக்குனர் சித்ராலயா கோபுவின், ‘காரணம் கேட்டு வாடி’ என்ற நாடகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தப் படம் வெளியாகி 36 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் பட்டாசுதான், முதல் பாடலில் இளையராஜா தோன்றுவது போலவும் ரிக்கார்டிங் தியேட்டர்ல இளையராஜாவின் இசை அமைக்கும் பணிகளோடு “கல்யாணமாலை“ பாடலுடன் படம் ஆரம்பமானது.
இளையராஜா பாடி, எஸ்.பி..பி பாடி, மலேசியா வாசுதேவனும் அழகான மனைவி என பாகவதர் குரலில் பாடி இந்த பட பாடல் கேசட் வெளியாகி இருந்தது.
உலகம் போற்றும் பாடகர் ரகுமான், அவரை துரத்தும் பெண்களால் கலவரமடையும் மனைவி கீதா, அதனால் அவர்களின் பிரிவு, சாதாரண மனிதராக வேறு மாநிலத்துக்கு போய், வீட்டை விட்டு ஓடி வரும் வேறு பெண்ணுடன் கேலியும் குறும்புமா பழகி ஜாலியா வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கணவனை காணாமல் தேடும் மனைவி கீதாவுக்கு ரகுமான் கிடைத்தாரா, ரகுமானின் புது தோழியா வந்த சித்தாரா நிலைமை என்ன ஆனது என்பது கதை.
சாதாரண கதைதான், இதை பாலசந்தர் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லி இருந்தார். இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி, புன்னகை மன்னன் படங்களில் பணிபுரிந்து அந்தப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார் இளையராஜா.
இந்தப் படத்திலும் இளையராஜாவின் பின்னணி இசை வருவதற்கு முன், தனது பழைய பல படங்களின் பின்னணி இசையை இதற்கு பயன்படுத்தினார் இயக்குனர் கேபி.
இதன் பின்புதான் இளையராஜா பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்காமல் தவிர்த்தார். இந்தக் கூட்டணி இதோடு முறிந்தது.
ஆனால் பாடல்கள் இளையராஜா கொடுத்த பாடல்கள்தான் அதெல்லாம் சரியாக அமைந்தது. எடுத்து நான் விடவா, கேளடி கண்மணி, கல்யாணமாலை, எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் என எல்லா பாடலும் பெரிய ஹிட்தான்.
விவேக் அப்போதுதான் அறிமுகமான நேரம், தலைமை செயலகத்தில் வேலை பார்த்து வந்த விவேக், வேலை பார்த்துக்கொண்டே நடித்தார், இவரின் நடிப்பும் இப்படத்துக்கு முக்கியமாய் இருந்தது. இதன் மூலம் தான் விவேக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே தெரிய ஆரம்பித்தார்.
இன்னும் ஜனகராஜ், ஜெயசித்ரா, குருதத், பூர்ணம் விஸ்வநாதன், செளகார் ஜானகி இவர்கள் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் நன்றாக இருந்தது.
இரண்டாவது நாயகியாக சித்தாரா அழகா நடித்திருந்தார். விவேக்கிற்கும், கீதாவின் அம்மாவாக ரகுமானின் மாமியாராக முரட்டுப்பெண்ணாக வரும் ஜெயசித்ராவுக்கும் வரும் காம்பினேசன் காட்சிகள் கலகலக்க வைத்தன.
பூர்ணம் விஸ்வநாதன், செளகார் ஜானகி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்கு ரொம்ப அழகாய் இருந்தன, குறிப்பாய் சாலிடெர் டிவி, அமலா இது போல 80-ஸ் 90-ஸ் நாஸ்டால்ஜியாவை ஞாபகப்படுத்தும் அருமையான படம் இது/
1989 அக்டோபர் 28ல் வெளியானது. 36 வருடங்களை கடந்த ஆலமரமாய் இப்படம் இன்றும் மனதில் நிற்கிறது என சொல்லலாம்.
– அபிராம் அருணாச்சலம்