Take a fresh look at your lifestyle.

இளைய தலைமுறை விரும்பும் படமாக இருக்கும்!

‘வேம்பு’ பற்றி இயக்குநர் ஜஸ்டின் பிரபு

37

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள ‘வேம்பு’ படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.

“உத்ரா புரொடக்சன்ஸ் – (ஹரி உத்ரா) ‘வேம்பு’ படத்தை மே 23-ம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியிடுகிறது.

இன்னொரு பக்கம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ‘வேம்பு’ படம் அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான வேம்பு, சிறந்த நடிகருக்கான விருதை ஹரிகிருஷ்ணனும், சிறந்த நடிகைக்கானை விருதை ஷீலாவும் பெற்றனர்.

இவ்விரண்டு விருதுகளைப் பெற்றது இப்படத்திற்கான முதல் அங்கீகாரம் என்பதாகப் படக்குழு மகிழ்கிறது.

இப்படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஜஸ்டின் பிரபு, “படத்தின் நாயகன் ஹரிகிருஷ்ணன், நாயகி ஷீலா இருவருமே வித்தியாசமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்கள்.

அகமதாபாத் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஹரிகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது அதை உறுதிசெய்துள்ளது.

சமீபத்தில் நடிகர் விக்ரம் ஹரியைப் பாராட்டி பேசியது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

நாயகி ஷீலா நடித்த ‘டூ லெட்’ திரைப்படம் 100 சர்வதேச விருதுகளுக்கு மேல் பெற்றுள்ளது.

அவர் கதாநாயகியாக நடித்த மண்டேலா திரைப்படம் தேசிய விருது பெற்றது. தற்போது இந்த வேம்பு திரைப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக கலந்து கொண்டுள்ளதுடன் சிறந்த நடிகைக்கான விருதையும் ஷீலாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

இன்றைய தேதியில் சென்டிமென்ட்டுடன் பின்னிப் பிணைந்து தான் நம் தமிழ் சினிமா இருக்கிறது. அதுதான் பார்வையாளர்களின் மன நிலையாகவும் இருக்கிறது.

அந்த வரிசையில் இந்த வேம்பு திரைப்படமும் சமூகக் கருத்து கொண்ட படமாக மட்டுமல்லாமல் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என நான் உறுதியாகச் சொல்கிறேன்.

இது ஒரு பெண்களுக்கான படமாக மட்டுமல்லாமல், இப்போதைய தலைமுறைக்கான படமாகவும் இருக்கும்.

இன்றைய சூழலில் ஒரு தந்தை எப்படி பெண் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், அவர்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் சூழலைப் புரிந்து எப்படி ஆதரவாக இருக்க வேண்டும்,

குழந்தைகள் தங்களுக்கு என ஒரு கனவு இருந்தாலும் பெற்றோரை எப்படி மதித்து நடக்க வேண்டும் போன்ற பல சென்டிமென்ட்டான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன.

ஹரிகிருஷ்ணனை வடசென்னை பையனாகவே பார்த்து வருகிறோம். இப்படத்தில் முழுக்க கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார்.

இதற்காக கிராமத்துப் பழக்க வழக்கங்களையெல்லாம் கற்றுக்கொண்டு ஒரு கிராமத்து மண் சார்ந்த மனிதனாகவே நடித்துள்ளார்.

ஷீலாவின் தந்தையாக தியேட்டர் லேப் ஜெயராவ் ஒரு இயல்பான வாழ்வியல் தந்தையாக வாழ்ந்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த ஜானகி. கண்கலங்க வைக்கும் விதமாக மிகச் சிறந்த யதார்த்தமான நடிப்பை இதில் வெளிப்படுத்தி உள்ளார்.

தங்க மகன் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஏ.குமரனின் ஒளிப்பதிவு மிகச் சிறந்ததாக பேசப்படும். வேம்பு படத்தை அழகிய வாழ்வியலாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதே முகம், ரபேல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய மணிகண்டன் முரளி இசையமைத்துள்ளார்.

மிருதன் படத்தில் பணியாற்றிய கே.ஜே வெங்கட்ராமன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநர் கோபி கருணாநிதி படப்பிடிப்பு லொகேஷன்களில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து காட்சிகள் இயல்பாக அமையும் விதமாக சுற்றுப்புற சூழலை உருவாக்கிக் கொடுத்தார்.

படம் யதார்த்தமாக வந்திருப்பதற்கு அவரது கலை இயக்கமும் ஒரு காரணம்.

படத்தின் தயாரிப்பாளர்கள் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தம்பதியினர் படம் இந்த அளவுக்கு விருதுகளுக்கு அனுப்பப்படும் வகையில் தரமாக உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் இவர்கள் கொடுத்த உற்சாகமும் ஒத்துழைப்பும் தான்.

அறிமுக இயக்குநர் தானே என்று நினைக்காமல் ஷீலா, ஹரிகிருஷ்ணன் இருவருமே படம் முழுவதும் மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த அந்த ஒத்துழைப்பில் தான் படத்தைக் குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது.

அந்த வகையில் இந்த வேம்பு திரைப்படம் மே 23 இல் வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் நடந்து வருகின்றன.

ஹரி உத்ரா பெரிய அளவில் வெளியிடுகிறார். மக்களுக்கு படம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்” என்று இயக்குநர் V ஜஸ்டின் பிரபு தெரிவித்துள்ளார்.