பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் இந்தப் படத்துக்குத் தீபிகாவுக்கு ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது. டைரக்டருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா விலகினார்.
அவர் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் நிலையில், நேற்று ஒரு செய்தி பரவியது. ‘சம்பளம் ரூ. 20 கோடி போதாது – மேலும் ரூ. 20 கோடி வேண்டும்’ என தீபிகா பிடிவாதமாக இருந்ததால், அவரை படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள் என்பதே அந்தத் தகவல்.
‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து நட்சத்திரங்கள் விலகுவது இது முதன் முறை அல்ல. இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, சம்பள விவகாரத்தால் சயிப் அலி கான், கரீனா கபூர் ஆகிய இந்தி ஆட்களும் விலகியுள்ளனர்.
தீபிகாவுக்கு பதிலாக, ருக்மணி வசந்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதனிடையே பிரபாஸ் படத்துக்கு ஒதுக்கி இருந்த கால்ஷீட்டை, தீபிகா அட்லீ படத்துக்கு கொடுத்துள்ளார்.
அட்லீ – அல்லு அர்ஜுன் இணைப்பில் உருவாகும் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தீபிகா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் மொத்தம் 5 நாயகிகள். இதில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பது உறுதியாகி இருந்தது. அவர்களைத் தொடர்ந்து 3-வது நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதர 2 நாயகிகளில் ஒருவராக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.