‘மக்கள் செல்வன்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து முத்திரை பதித்தார்.
ஹீரோவாக நடிப்பது மட்டுமே அவரது நோக்கமல்ல, மாறுபட்ட பாத்திரங்களை ஏற்று நடிப்பதை இலக்காகக் கொண்டுள்ளார்.
‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘ஜவான்’ போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் விஜய் சேதுபதி.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதன் சுருக்கம் :
“நான், பணம் சம்பாதிக்கவே நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன் – எனக்கு நடிக்கவே தெரியாது – மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இலக்குடன்தான் சென்னைக்கு வந்தேன் – கல்லூரி நாட்களில் தொலைபேசி பூத், கார் ஆக்சஸரி கடை, சர்வே எடுப்பது என பல்வேறு பகுதிநேர வேலைகளைச் செய்துள்ளேன்
ஒரு துரித உணவு விடுதியில் பணிபுரிந்தேன் – அதேபோல் ஒரு உணவு விடுதியைத் திறக்கும் கனவும் எனக்கு இருந்தது – உதவி இயக்குநர்கள், சக நடிகர்கள் உட்பட திரையுலகில் உள்ளவர்களைக் கவனித்து நடிப்பை கற்றுக் கொண்டேன்” என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.