Take a fresh look at your lifestyle.

எங்களை மன்னிக்கவும்; உங்கள் உழைப்பு உங்களுக்கு!

திருடனின் பெருந்தன்மை

‘காக்கா முட்டை, கடைசி விவசாயி’ போன்ற திரைப்படங்களின் இயக்குநர் மணிகண்டன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வருகிறார்.

மணிகண்டன் குடும்பத்தினருடன் சென்னையில் வசிப்பதால், உசிலம்பட்டி வீட்டுக்கு அவ்வப்போது மட்டும் சென்று வருகிறார்.

இந்த நிலையில், மணிகண்டனின் வீடு பூட்டி இருப்பதை அறிந்த அடையாளம் தெரியாத சிலர்,  கடந்த 8ஆம் தேதி இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

கூடவே அவரது இரண்டு தேசிய விருதுப் பதக்கங்களையும் எடுத்துச் சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகை மற்றும் வெள்ளிப் பதக்கங்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள், மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலிதீன் பையில், தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்களை மட்டும் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளனர். அதில், “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதி வைத்துள்ளனர்.

தகவலறிந்து மணிகண்டனின் வீட்டுக்கு வந்த காவல்துறையினர் தேசிய விருதுப் பதக்கங்களையும், அந்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.