Take a fresh look at your lifestyle.

சினிமா வாழ்க்கையில் 22 ஆண்டுகளைக் கடந்த தனுஷ்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக உள்ள தனுஷ், சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

2002ம் ஆண்டு மே 10ம் தேதி அவர் கதாநாயகனாக நடித்த ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளிவந்தது.

அப்படம் முடிந்த நிலையில் அதை யாரும் முன்வாங்க வரவில்லை. சில பல மாதங்களுக்குப் பிறகு படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

யுவனின் இசையில் அமைந்த சிறப்பான பாடல்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம். தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்திற்கு செல்வராகவன் திரைக்கதை எழுதியிருந்தார்.

துள்ளுவதோ இளமைக்குப் பிறகு ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’ என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தார் தனுஷ்.

பின்னர் சில தோல்விகள் வந்தாலும் ‘புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி’ என அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ அவரது களத்தையே மாற்றியமைத்தது.

அப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். பின்னர் ஹிந்தியில் ‘ராஞ்சனா’ படத்தில் அறிமுகமாகி 100 கோடி வசூலைப் பெற்றார்.

பிரஞ்ச் மொழியில் ஒரு படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஆங்கிலப் படம் என உலக அளவிலும் சென்றார். ‘3’ படத்தின் ‘ஒய் திஸ் கொலவெறி’, ‘மாரி 2’ படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் அவரை யு டியுப் தளத்தில் பெரிய சாதனையைச் செய்ய வைத்தது. ‘அசுரன்’ படத்திற்காக இரண்டாவது முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இந்த வருடம் ‘வாத்தி’ படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி வெற்றியைப் பதித்தார். சினிமாவில் அறிமுகமான காலங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நடிகர்களாக ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகியோர் இருந்தனர். அப்படி விமர்சித்தவர்களையே பாராட்ட வைக்கும் அளவிற்கு தங்களது சுய திறமையால் வளர்ந்தவர்கள் அவர்கள்.

நன்றி: தினமலர்.