Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர் படத்தில் கண்ணதாசனுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு!

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘திருடாதே’ படம் பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தது. இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுத வேண்டிய நிலை இருந்தும், அவர் 2 பாடல்கள் மட்டுமே எழுதியிருந்தார் என்பது வியப்புக்குரியது.  

காரணம், இந்தியில் 1956-ம் ஆண்டு வெளியான படம் ‘பாக்கெட் மார்’. இந்தப் படத்தை தமிழில் எடுக்க விரும்பிய சின்ன அண்ணாமலை, அதற்கு எம்.ஜி.ஆர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அப்போது புராணப் படங்களில் நடித்து வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர், ஒரு சில சமூகப் படங்களில் நடித்து தோல்வியை சந்தித்ததால் இந்த சமூகப் படத்தில் எப்படி நடிப்பது என்று யோசித்துள்ளார்.

அந்தச் சமயத்தில் ‘பாக்கெட் மார்’ என்ற இந்திப் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர், இந்தக் கதை நமக்கு செட் ஆகும் என்று நினைத்து அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

படமும் தொடங்கியது. சரோஜாதேவி நாயகியாக நடித்திருந்த நிலையில், படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது.

இதனால் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை கஷ்டத்தை சந்தித்தால், இந்தப் படத்தை ஏ.எல்.சீனிவாசனிடம் கொடுத்துவிடலாம் என்று யோசனை கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.

அதன்படி, இந்தப் படம் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவசனிடம் சென்றது.

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான புராணப் படங்களுக்கு கண்ணதாசன் வசனம் எழுதி அந்தப் படங்கள் வெற்றி பெற்றதால், இந்தப் படத்தில் கண்ணதாசன் வசனம் எழுதட்டும் என்று ஒப்புக்கொண்ட ஏ.எல்.சீனிவாசன், பாடல்களை அவருக்கு கொடுக்கவில்லை.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் பாடல்கள் எழுதிய நிலையில், கண்ணதாசன் 2 பாடல்கள் மட்டுமே எழுதியிருந்தார்.

சின்ன அண்ணாமலை தயாரிக்கும்போது வசனம் மற்றும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதுவதாக இருந்தது.

ஆனால், கண்ணதாசனின் அண்ணனே தயாரித்திருந்தாலும் கண்ணதாசனுக்கு அந்தப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அவரது மகனும் நடிகருமான அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.