பொங்கல் வாரத்தில் சென்னையில் ஒரு அதிசயம் நடந்தது. சினி டைரக்டர்களும், பிரபல நட்சத்திரங்களும், டெக்னீசியன்களும் ஒரு பிரபல நட்சத்திரத்தைத் தேடிப் போகிறார்கள். அந்த நட்சத்திரம் ஒரு பழைய நட்சத்திரம்.
எல்லிஸ்.ஆர். டங்கன் என்ற புகழ்பெற்ற டைரக்டர் தான் அவர்! அமெரிக்கா். 1935 முதல் 1951 வரை தமிழ் சினிமாக்களை டைரக்ட் செய்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
சதிலீலாவதி, இரு சகோதரர்கள், அம்பிகாபதி, சகுந்தலா, மீரா, பொன்முடி, மந்திர குமாரி முதலியப் படங்கள் அவர் இயக்கி வெளிவந்தவை.
சென்னை அமெரிக்கன் சென்டரில் பேசியபோது, கந்தசாமிப் பிள்ளை, எம்.எஸ். சுப்புலட்சுமி, தியாகராஜ பாகவதர் என்ற பெயர்களை அழகாக உச்சரித்தார்.
83 வயதான இந்த டைரக்டரின் நினைவு சக்தி அபாரம். “என்னைத் தெரிகிறதா?” என்று யாராவது கேட்டால் அவர்களது பூர்வோத்தரம் முழுக்கவும் சொல்லி விடுவார்.
அவர் கணிப்பில்; அந்த நாளைய நடிகைகளில் டி.பி. ராஜலட்சுமி சிறந்த நடிகை. பாகவதருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும். எம்.ஆர்.சந்தானலட்சுமிக்கு நடிப்பு நன்றாக வரும். இவர்கள் இருவரும் நடித்த அம்பிகாபதி படம் கல்கத்தாவில் ஷுட் செய்யப்பட்டது.
அதன் கேமராமேன் ஜிதன் பானர்ஜி. ரோமியோ ஜூலியட் போல அம்பிகாபதியை எடுக்க டங்கன் விரும்பினார். ஆனால் பாகவதருக்கும், சந்தான லட்சுமிக்கும் காதல் சொல்லிக் கொடுப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது.
எம்.ஜி.ஆர்., சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்புத் திறன் கூடிக்கொண்டு வந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், துரைராஜ் சிறந்த நடிகர்கள். “ஙொப்பன் மவனே அடிப்பியோ சிங்கம்டா” என்ற பிரபலமான சகுந்தலை வசனத்தை டங்கன் தமிழில் சொல்லிக் காட்டினார். சபையில் ஒரே சிரிப்பு.
பாபநாசம் சிவன் நல்ல இசையமைப்பாளர். அவரது பாடல்கள் எல்லாமே ஹிட் ஆகும்.
அந்த நாளில் டப்பிங் கிடையாது! பின்னணிக்காரர்கள் எல்லோரும் செடிகொடிகள் பின்னால் மறைந்திருக்க வேண்டும். ஸ்டூடியோவில் கூரை இராது. காக்கைகளை விரட்டிக்கொண்டே இருக்க வேண்டும். மழை வந்தால் அரோகரா!
ஆச்சரியமாக 1937-ல் தம்மைப் பற்றியே ஒரு டாக்குமெண்டிரியை எடுத்து வைத்துள்ளார் டங்கன்! அதில் அவர் டைரக்ட் செய்த காட்சிகளைப் படமாக்கியுள்ளார். இதுவே இப்போது நமக்கு ஒரு ‘பொக்கிஷம்’ போல தெரிகிறது.
பெரும்பாலும் செட்டியார்கள்தான் அந்த நாளைய தமிழ் படங்களை எடுத்தார்களாம். மீரா படம் எடுக்க ராஜஸ்தானம் சென்றார்கள். (டங்கன் அதன் டைரக்டர்).
துவாரகை கோயிலுக்குள் பக்தை மீரா ஐக்கியமாகி இருந்ததாகக் காட்சி!
“ஜனார்த்தனா… ஜெகந்நாதா…” என்று தொடங்கும் பாடலை எம்.எஸ். அதே பிரசித்தி பெற்ற துவாரகை கோயிலில் பாடும்போது அழுது விட்டாராம். பாடல் முடிந்தாலும் அழுகை நிற்கவில்லையாம். அங்கே டங்கன் உட்பட வந்திருந்த எல்லோர் கண்ணிலும் நீர் வந்து விட்டதாம்.
“என்னால் அந்தக் காட்சியை மறக்க முடியாது” என்கிறார் டங்கன்.
டங்கன் இயக்கிய ‘இரு சகோதரர்கள்’ நல்ல வெற்றிப் படம். அதன் முதல் நாள் வசூலை காங்கிரஸ் கட்சிக்கு அளித்தார்களாம்.
‘கெயிட்டி’யில் அந்த விழா நடந்தது. (சுதந்திரம் கிடைப்பதற்கு முன் நடந்த சம்பவம் இது) அதற்கு காங்கிரஸ் சார்பில் திரு. ராஜகோபாலச்சாரியும், திரு.சத்தியமூர்த்தியும் வந்திருந்தார்களாம் (சத்தியமூர்த்தி அப்போது சென்னை நகர மேயர்)
படத்தை ராஜாஜி பார்த்து விட்டு “நான் பார்க்கும் முதல் படம் இது. இது போன்ற நீதி நிறைந்த படங்களை நீங்கள் எடுக்க வேண்டும். அப்போதுதான் நான் சினிமா பார்ப்பேன்!” என்று டங்கனிடம் கூறினாராம்.
அந்த நாளில் பாட்டுகள் அதிகம். படம் மூன்று, நான்கு மணி நேரம் ஓடும்! படம் எடுக்க ஒரு வருஷம் ஆகிவிடும். இந்த நேரத்தில் அந்நாளில் ரெக்கார்ட் பிரேக்கா டங்கன் அந்த ‘இரு சகோதர்கள்’ படத்தை மூன்றே மாதங்களில் எடுத்தாராம்! அதிகமான சாதனை அது!
படத்தின் முழு வசனங்களை எழுதிக் கொள்வார்களாம். அதை டங்கனுக்கான ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எழுதிக் கொடுப்பார்களாம். டங்கன் அதைப் படித்து ஷாட் பிரித்துக் கொள்வாராம்.
இந்த பேப்பர் வேலை முடிய இரண்டு மாதங்கள் ஆகும் என்கிறார் டங்கன்.
டங்கன் அந்த நாளில் எப்படி இந்தியா வந்தார்?
சிறுவயதில் வெறும் பாக்ஸ் கேமிராவுடன் ஐரோப்பாவைச் சுற்றியவர் அவர். பிறகு தாய் நாடான அமெரிக்கா போய் காமிரா, மேக்கப், சினிமா கலை எல்லாவற்றையும் கற்றுத் தேறினார்.
இளைஞர் டங்கனை இந்தியாவுக்கு ஸ்டுடியோ சம்பந்தமாக அழைத்து வந்தார்கள். ஆனால் அந்த காரியம் இனிதே நிறைவேற வில்லை.
ஆனால், ஆச்சரியமாக ‘சதிலீலாவதி’ தமிழ்ப் படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.
படம் சக்கைப் போடு போட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. இந்தியாவில் அந்த நாளில் சினிமா அப்படி பரவியிருந்தது ஹாலிவுட்டுக்குத் தெரியாது. அமெரிக்கா திரும்பிய டங்கன் அவர்களுக்கு அதை எடுத்துச் சொன்னாராம்.
டங்கன் வற்புறுத்ததால் ஜங்கிள் என்ற படத்தை ஹாலிவுட்காரர்கள் இங்கே வந்து எடுத்து வந்தார்கள்.
தற்சமயமும் ஒரு ஆங்கிலப் படத்திற்கான லொகேஷனைப் பார்க்கத்தான் இங்கே வந்திருக்கிறார் டங்கன்.
– புஷ்பா
‘புதிய பார்வை’ 1994, பிப்ரவரி இதழில் இருந்து…