தூள் திரைப்படம் 2003-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இதனுடன் அன்பே சிவம், வசீகரா, விஜயகாந்தின் சொக்கத்தங்கம் சத்யராஜ்-ன் ராமச்சந்திரா என நிறைய படங்கள் வெளியாகின.
தூள் திரைப்படம் தமிழ் சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடி என்று சொல்லலாம்.
எல்லா படமும் பொங்கல் அன்று வெளியாக, தூள் திரைப்படம் ஐந்து நாட்கள் முன்னதாக ஜனவரி 10 அன்றே வெளியானது.
ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் ‘தூள்’. ‘தில்’ படத்தின் வெற்றியைக் கண்டு ஏ.எம். ரத்னம் அவ்வளவு செலவு செய்தார்.
எனவே ஒரு ஐந்து நாட்கள் முன்னதாகவே வெளியிட்டு முடிந்த அளவு வசூல் செய்துவிடலாம் என்று இறக்கினார்கள். இந்தப் பாலிசியை இப்போது வரும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் பாலோ செய்கின்றன.
மதுரையில் ஒவ்வொரு காட்சிக்கும் தியேட்டர் அதிர்ந்தது. இடைவேளையில் தேர்தல் பூத்தில் எல்லோரையும் அடித்துப் போட்டுவிட்டு புகார் கடிதத்தில் கைரேகை வைத்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்து வருவார் விக்ரம்.
படம் பார்த்துவிட்டு பப்ஸ் சாப்பிட வந்த இளந்தாரிகள் அத்தனைப் பேரும் நெஞ்சை விடைத்துக் கொண்டு விக்ரம் போலவே வந்தார்கள். அப்படி ஒரு தாக்கத்தை அந்த முதல் பாதி ஏற்படுத்தியது. விக்ரமின் நடிப்பு.
உண்மையில் பொங்கல் அன்று வந்த படங்கள் எதையுமே பார்க்க தோன்றாத அளவிற்கு தமிழகம் முழுவதும் அடித்தது தூள் அலை.
சண்டைக் காட்சியில் பரவை முனியம்மாவை பாட வைத்தது முதன்முறை பார்த்த எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி.
தியேட்டர் மொமெண்ட்ஸ், தியேட்டர் மொமெண்ட்ஸ் என்று இப்போது அடிக்கடி பேசுகிறார்கள். இந்தத் திரைப்படத்தில் இருக்கும் தியேட்டர் மொமெண்ட்ஸ்களை எண்ணிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
அத்தனை தியேட்டர் மொமெண்ட்ஸ்களை அனாயாசமாக வைத்திருந்தார் தரணி. அதை சுமந்து இருந்தார் விக்ரம்.
– நன்றி முகநூல் பதிவு.