Take a fresh look at your lifestyle.

முதல் படத்திலேயே கண்ணீர் விட்ட மார்கண்டேயன்!

58

சினிமாவில் அறிமுகப் படங்கள் முக்கியம். சிலருக்கு அறிமுகப் படங்கள் பெரும் பெயரைப் பெற்றுத் தந்திருக்கின்றன. முதல் படத்தின் பெயராலேயே சிலர் இன்னும் அழைக்கப்படுகிறார்கள்.

சிலருக்கு தங்கள் அறிமுகப் படங்களை வெளியில் சொல்ல முடியாத நிலையும் உண்டு. முதல் படம் கைக்கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த படங்களில் வெற்றிபெற்று முன்னணிக்கு வந்தவர்களும் ஏராளம். அப்படித்தான் இவரும்.

‘காக்கும் கரங்கள்’ படம் மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார், ‘மார்கண்டேயன்’ நடிகர் சிவகுமார். அதற்கு முன் ‘சித்ராபெளர்ணமி’ என்ற படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.

இதனால், இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு சிபாரிசில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு வந்த அவருக்கு ‘காக்கும் கரங்கள்’ வாய்ப்பு கிடைத்தது.

அப்போது பழனிச்சாமி என்றே அறியப்பட்ட அவருக்கு, சிவகுமார் என்று பெயர் சூட்டியது ஏ.வி.எம் செட்டியார்தான்.

இந்தப் படத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி ஜோடியாக நடித்தனர். நாகேஷ், மணிமாலா, எஸ்.என்.லட்சுமி, ரேவதி, எஸ்.வி.சுப்பையா உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார்.

இதில் இன்னொரு ஹீரோவாக அறிமுகமானவர் சிவகுமார். இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பெரிதாக எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவருக்கு ஜோடியாக நடித்தவர் சரியான நடிப்பை வழங்காததால், பல காட்சிகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் சோர்ந்து போனார், அறிமுக நடிகர் சிவகுமார்.

“என் கேரக்டரை இப்படி வெட்டிட்டீங்களே, என் கனவெல்லாம் போச்சே” என்று ஏ.வி.எம் நிறுவனத்திடம் கண்ணீர் விட்டிருக்கிறார் சிவகுமார்.

பிறகு அடுத்தடுத்தப் படங்களில் நல்ல கேரக்டர் தருவதாக அவர்கள் நம்பிக்கை அளித்ததை அடுத்துதான் சமாதானமாகி இருக்கிறார் சிவகுமார்.

இதை ஒரு பேட்டியில் ஏ.வி.எம் சரவணன் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது அடுத்த சோகம்!

-அழகு