Take a fresh look at your lifestyle.

தொடங்கியது ‘பீட்சா 4’ படப்பிடிப்பு!

தமிழ்த் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்கவைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ -ஐ K A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.

எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் புகழ் ரத்திகா நாயகியாக நடிக்கிறார்.

‘ராட்சசன்’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ் ஜே அர்ஜுன் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.

‘எல் கே ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘கொரில்லா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘அயலி’, ‘சூது கவ்வும் 2’, ‘யங் மங் சங்’, ‘ஃபிளாஷ்பேக்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியுள்ள K A ஆண்ட்ரூஸ், ‘பீட்சா 4’ திரைப்படத்தை இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் ‘பீட்சா 4’ அமையும்,” என்று தெரிவித்தார்.