Take a fresh look at your lifestyle.

திமிராகக் கதை கேட்ட மம்முட்டி; திருப்பம் தந்த படம்!

கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலும், தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் நீங்காத இடம்பிடித்தவர் நடிகர் மம்முட்டி.

அவர் நடித்த ‘மௌனம் சம்மதம்’, ‘அழகன்’ போன்ற படங்கள் இன்றும் தமிழ் சினிமா வரலாற்றில் பேசப்படுபவை.

குறிப்பாக, நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ‘தளபதி’ படத்தில் அவர் வெளிப்படுத்திய கெத்தான நடிப்பு, அவரைத் தமிழர்களின் ஃபேவரைட் லிஸ்டில் சேர்த்தது.

பொதுவாக, முன்னணி நடிகர்கள் ஒரு படத்துக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது வழக்கம். ஆனால், தமிழ் நடிகர்களில் ஒரு சிலரைப் போலவே, மம்முட்டியும் ஒரு தமிழ்ப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்து முடித்துள்ளார் என்ற வியக்க வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனுடனான ஒரு பேட்டியில், நடிகர் பாவா லட்சுமணன் இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அது, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘ஆனந்தம்’ திரைப்படம்.

முதலில் இந்தப் படத்தில் நடிக்க நடிகர் சரத்குமாரை தான் படக்குழு அணுகியதாம். ஆனால், சில சந்தர்ப்பச் சூழல்களால் அது நிறைவேறவில்லையாம்.

அதன்பிறகு, மம்முட்டியிடம் கதை சொல்ல லிங்குசாமி மற்றும் படக்குழு சென்றிருக்கிறது.

அப்போது, “மம்முட்டி உட்கார்ந்திருந்த ஸ்டைலைப் பார்த்தால், நம்மை மதிக்கவே மாட்டாரோ என்று தோன்றும். ஒரு மாதிரி காலைத் தூக்கி மேலே போட்டபடி, சற்றுத் தெனாவெட்டாக அமர்ந்திருந்தார். நாங்கள் கீழே உட்கார்ந்திருந்தோம்,” என்று பாவா லட்சுமணன் விவரித்தார்.

லிங்குசாமி, மிகுந்த பதற்றத்துடன் கதையைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இடையில், “டீ சாப்பிடலாமா?” என்று மம்முட்டி கேட்டிருக்கிறார்.

டீ குடித்த பிறகு, லிங்குசாமி கதையை முழுவதுமாகச் சொல்லி முடித்திருக்கிறார். கதை சொல்லி முடிந்ததும் அங்கே நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம்!

உடனே எழுந்து வந்த மம்முட்டி, லிங்குசாமியைக் கட்டிப் பிடித்து நெகிழ்ச்சியுடன் முத்தம் கொடுத்தாராம்!

அதன் பிறகு, தயாரிப்பாளரான சௌத்ரிக்கு உடனே போன் போடச் சொன்ன மம்முட்டி, “சார் எனக்கு இந்தக் கதை ரொம்ப மனசுல பட்டுருச்சு. ரொம்ப நாளைக்குப் பிறகு எனக்கு ஒரு நல்ல கதை கிடைச்சிருக்கு. அதனால் எனக்குச் சம்பளமே வேண்டாம்!” என்று சொல்லிவிட்டார்.

தயாரிப்பாளர் சௌத்ரி, மம்முட்டியிடம் சம்பளம் பேச வந்தபோதும், தனக்குப் பணம் வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.

இறுதியில், அவருடைய நடிப்பைப் பாராட்டி, தயாரிப்பாளர் சௌத்ரி, ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் கேரளாவுக்கான விநியோக உரிமையை (Kerala Rights) மம்முட்டிக்குக் கொடுத்துள்ளார்.