Take a fresh look at your lifestyle.

ரோஜா, மௌனராகம், டூயட் – கைநழுவ விட்ட படங்கள்!

 நடிகர் ஆனந்த் ஆதங்கம்

202

1987-ம் ஆண்டு வெளியான ‘வண்ண கனவுகள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்த்.

தொடர்ந்து, கமல்ஹாசனின் சத்யா படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். 

பூந்தோட்ட காவல்காரன் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார். சத்யா படம் போலவே இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.  கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்திருந்தார்.

மணிரத்னம் இயக்கத்தில், அஞ்சலி, திருடா திருடா ஆகிய படங்களில் நடித்திருந்த ஆனந்த், வில்லன் குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

பல வெற்றிப்படங்களைத் தான் கை விட்டது குறித்து அவர் அளித்த பேட்டி இது :

கே.பாலச்சந்தர் இயக்கத்தில், வெளியான டூயட் படத்தில் நான் தான் ஹீரோவாக  நடித்திருக்க வேண்டும். பைத்தியக்காரத்தனமாக யாரோ சொல்வதைக் கேட்டு விட்டுவிட்டேன். அந்தப் படத்துல சம்பள விஷயத்துல தப்பு பண்ணிட்டேன்..

இப்போதும் இதை நினைத்தால் என் மேல் கோபமாக வருகிறது. சம்பள விஷயம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

அதேபோல், மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தில் கார்த்திக் நடித்த கேரக்டரில் என்னை தான் நடிக்கச் சொன்னார்கள். ரோஜா படத்தில் முதலில் என்னைத்தான் கேட்டார்கள்.

ஏனோ கைமாறி விட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் எனக்கு எல்லா படமும் தோல்வி. பட வாய்ப்பே இல்லை. இதைத் தெரிந்து கொள்ளவே எனக்கு 6 மாதங்கள் ஆனது” என்று நடிகர் ஆனந்த் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.

– பாப்பாங்குளம் பாரதி.