தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.
இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன், பிரதீப் ராயன், ‘டைகர் கார்டன்’ தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர்.
இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு சாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத்தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான ‘லால்குடி’ N.இளையராஜா, இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக ‘டான்’ அசோக் பணியாற்றிருக்கிறார்.
விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார்.
S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.
இதனிடையே நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதலாவதாக கார்டியன் படக்குழுவினரை வரவேற்று பேசினார் தயாரிப்பாளர் விஜயசந்தர்.
தனக்கு உறுதுணையாக இருந்த தனது நண்பர்களுக்கு நன்றி கூறினார். “நான் தொடங்கிய ‘வாலு’ திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது.
அந்த படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். ‘கார்டியன்’ படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன், கொரோனா தொற்று காலம் என்பதால் பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது.

அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர்.
அப்பொழுதுதான் இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர். கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் தனது எண்ணத்திற்கு முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி ஆவார்.
அதன் பிறகு இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த படத்தை சிறப்பாக முடித்து கொடுத்தார். தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்தில் பணிபுரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர்.
கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்த படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்” என்று கூறினார்.
சாம்.C.S
அடுத்து இசையமைப்பாளர் சாம்.C.S பேசும் பொழுது,”சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது. முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்ஷிகாவும் ஒருவர்.
மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய ஹாரர் படங்கள் பண்ணும் பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவது போல தோன்றும் அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன்.
இயக்குனர்கள் இருவருடனும் இதுதான் முதல் படம். அவர்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தத் திரைப்படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று அனைவரும் நேர்மையான உழைப்பை கொடுத்துள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளி வருகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பலதுறையினர் பணியாற்றுகின்றனர்.அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன்.
ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும் விதமாக இல்லாமல், விதவிதமான திரைக்கதைகளையும் விதவிதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன். உதாரணத்திற்கு ஹன்ஷிகா உடனே மூன்று படங்களில் பணிபுரிந்திருக்கிறேன்.
மூன்றிலும் ஒரே மாதிரியான இசையை நாம் கொடுக்க முடியாது விதவிதமான இசையை முயற்சி செய்ய வேண்டி உள்ளது,அவ்வாறு செய்யும்போது சில வெற்றி அடையும் சில தோல்வியடையும் தோல்வியிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளேன். ஊடகத்துறையினரின் ஆதரவு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.
ஹன்ஷிகா
ஹன்ஷிகா மோத்வானி பேசும் பொழுது,”கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கார்டியன்’ திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி”, என்றார்
பிரதீப்
படத்தின் கதாநாயகன் பிரதீப் பேசும் பொழுது,”ஊடகத்துறையினர் அனைவருக்கும் மாலை வணக்கம்! எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார். அதே போல இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார்.
எனது கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் ஏற்படவில்லை. இயக்குனர்கள் சபரி-குரு சரவணன் மற்றும் ஹன்ஷிகா மோத்வானி அவர்களுக்கும் மிக்க நன்றி. படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, ஊடகத்துறையினரின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி!” என்றார்.
ஸ்ரீராம் பார்த்தசாரதி
அடுத்ததாக பாடகர் மற்றும் நடிகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பேசும் பொழுது,”இந்த படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு பாடகர் நடிகர் என்பது எனக்கு சற்று தூரமான விஷயம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்சந்தர் உடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன்.
திடீரென அவர் இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடிக்கிறீர்களா, என்று கேட்டார் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

தியா
அடுத்ததாக தியா பேசும்பொழுது,”வாய்ப்புகள் தரப்படுவதில்லை உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.ஆனால் வெள்ளித்திரையில் இயக்குனர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார்.
உலகிலேயே மிகப்பெரிய பரிசு நமக்கு நம் மீது உள்ள நம்பிக்கையை விட நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே ஆகும் என என் சகோதரி கூறுவார்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எதிர்காலங்களில் பணியாற்றுவேன்.
தனது பொன்னான நேரத்தை செலவு செய்து எங்களை ஊக்குவிக்க வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் ஹன்சிகா அவர்களை ரசித்து ரசித்து இணைந்து பணியாற்றி உள்ளோம். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த படம் அமையும். ஊடகத்துறையினரின் ஆதரவுக்கு மிக்க நன்றி”,என்று பேசினார்.
ஷோபனா
நடிகை ஷோபனா பேசும்போது,”இரண்டாவது படமே மிகப்பெரிய படமாக அமைந்தது,மிக்க மகிழ்ச்சி இந்த வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனர்கள் இருவருக்கும் மிக்க நன்றி. ஹன்ஷிகா அவர்களுடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று திரைப்படம் வெளியாகிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
அபிஷேக் வினோத்
நடிகர் அபிஷேக் வினோத் பேசும் பொழுது,”தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.விஜய்சந்தர் என்னுடைய குரு ஆவார். ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தார்.அதேபோல இப்படத்திலும் நடிக்க கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கதாநாயகி ஹன்ஷிகா மோத்வானி மற்றும் கதாநாயகன் பிரதீப் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று பேசினார்.
தங்கதுரை
தங்கதுரை பேசும் பொழுது,”திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.இந்த படத்தில் அவருடைய உதவியாளர்களிடம் பணிபுரிந்துள்ளேன். ‘வாலு’ திரைப்படத்தில் விஜயசந்தர் அவர்கள் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். இயக்குனர்கள் குரு சரவணன் மற்றும் சபரி இருவரும் இரவு பகல் பாராமல் இந்த படத்திற்காக உழைத்தனர்.
ஹன்சிகா அவர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி அவர் மிகவும் அழகான பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அவர்களுடன் நடித்ததும் மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இந்த படத்திற்கு தங்களது கடின உழைப்பை கொடுத்துள்ளனர். வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்க நன்றி”, என பேசினார்.
சபரி
இரட்டை இயக்குனர்களில் ஒருவரான சபரி பேசும் பொழுது,”நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் ஆகிய திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம்,அவர்களை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம்.

அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார். இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம்.
அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள்.
சாம்.C.S அவர்களும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்து நல்ல பழக்கம் அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம்.
இத்திரைப்படத்திற்காக முழு ஒத்துழைப்பையும் நல்கினார். ஊடகத் துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.
குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று கூறினார்.
கே.எஸ்.ரவிக்குமார்
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்பொழுது,” நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றி தான் முதலாவதாக பேசுவேன். ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன்.
சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது. கலைஞர்-100 நிகழ்விற்கு நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார். அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது.

அவருக்கு இசைவெறி உள்ளது. கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார். ஹன்ஷிகாவும் தன்னுடைய சிறப்பாக நடித்திருந்தார்.
அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன.
குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்” என முடித்தார்.
இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
படம் நாளை திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.