நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையேயான குடும்பப் பிரச்சினை, வானிலை அறிக்கைப் போல் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விவாகரத்துக்குப் பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் தாயார் சுஜாதா கூறினார்.
அதை ரவி மோகனும் கெனிஷாவும் மறுத்திருந்தனர். ஆனால் இருவரும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வுக்கு ஜோடியாக சென்றனர்.
இது கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் பலரும் இவர்களது விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சமீபத்தில் பாடகி சுசித்ரா, ரவி மோகன் – கெனிஷாவுக்கு ஆதரவாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஆர்த்தியின் தந்தை கிருஷ்ண மூர்த்தி, பாடகி சுசித்ரா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில் “பாடகி சுசித்ரா, ரவி மோகன் – கெனிஷா ஆகியோருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். மேலும் பல்வேறு நேர்காணல்களில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா, ரவி மோகன் – கெனிஷா ஆகியோருக்கு எதிராக பேச யூட்யூபர்களுக்கு பணம் கொடுப்பதாக பேசியிருக்கிறார்.
ஆர்த்தியின் கண்ணியத்தை சுசித்ரா பாழாக்கி விட்டார். இது போல அடிக்கடி அவதூறு கருத்துகளை திரைத்துறையினருக்கு எதிராக அவர் கூறி வருகிறார்.
எனவே பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தப் புகாரில் ஆர்த்தியின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர்த்தியின் தாயாரும் களம் இறங்கினார்.
அவரது புகார் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா, தனது மருமகன் ரவி மோகனுக்கு தன் வக்கீல் மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீசை அவர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது :
ஆர்த்தி ரவியின் திருமண விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது – திருமண பிரச்சனை குறித்து மோசமாக வெளியிடப்பட்ட அனைத்து விஷயங்களையும் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும்.
அடுத்தவர்கள், தனக்கு என்ன செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் நாம் அப்படி நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்தவர்கள் நமக்கு செய்யக் கூடாது என நினைக்கும் விஷயத்தை நாமும் அடுத்தவர்களுக்கு செய்யக் கூடாது’ என சுஜாதா வக்கீல் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
கொஞ்ச நாட்களாக கணவனும், மனைவியும் மவுனம் காத்து வரும் நிலையில் ஆர்த்தியின் பெற்றோர் இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்க ஆரம்பித்துள்ளனர்.
இது எங்கே போய் முடியுமோ?
– பாப்பாங்குளம் பாரதி.
#ஜெயம்_ரவி_மோகன் #ரவி_மோகன் #ஆர்த்தி #கெனிஷா #விவாகரத்து #சினிமா_நட்சத்திரங்கள் #Jayam #Ravi_Mohan #Arthi #Kenisha #Divorce #பாடகி_சுசித்ரா #singer_Suchitra #சுஜாதா #Sujatha #Marriage_issue