தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த நகைச்சுவை முன்னோடிகளில் மிக முக்கியமானவர் நடிகர் டி.எஸ்.துரைராஜ்
1940-1970-களில் நாடக உலகின் முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகளின் சீடரான டி.எஸ்.துரைராஜ் நாடக உலகில் இருந்து திரையுலகிற்கு வந்தவர்.
மேடை நாடக நடிகராகவும், மிகத்திறமையான தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராகவும் விளங்கியவருமான இவர், இயக்குனராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
இவரது பருத்த உடல்வாகும் தங்கு தடையற்ற வசன உச்சரிப்பும் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும்.
குதிரை ரேஸில் கலந்து கொள்வதில் அலாதிப் பிரியர். மற்றவர்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவும் குணமுடையவர்.
“காலையிலே எந்திரிச்சு
கஞ்சித்தண்ணி இல்லாம
கஷ்டப்படுறேனே கடவுளே!’’
‘ஏங்க.. பயப்படுறீங்க.. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதா?’’
மதுரையைச் சேர்ந்த இவர் முதலில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடித்து, அதன் பிறகு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார்.
கலைவாணரைப் போலவே அவர் சம்பந்தப்பட்ட படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை அவரே தீர்மானித்திருக்கிறார்.
சந்திரபாபுவுடன் “கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே, மச்சி வீட்டில் காத்திருக்கும் மல்கோவா மாம்பழமே” என்ற பாடல் இப்போதும் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதைப் பார்த்திருக்கலாம். அப்பாடலில் வருபவர் தான் டி.எஸ்.துரைராஜ்.
“நகைச்சுவை நடிகராக ஆனது தான் என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத விஷயம்’’ என்று நெகிழ்வோடு கூறும் டி.எஸ்.துரைராஜின் நடிப்பை இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் விதத்தில் இருப்பதே அவருடைய வாழ்நாள் சாதனை.
– மணி அமுதன்