சினிமாத் துறையில் சமீபகாலமாக மலையாள படங்கள் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் வசூலைக் குவிக்கிறது. இந்த வருடம் ரிலீசான பிரேமலு, ஆடு ஜீவிதம், பிரம்மயுகம், மஞ்சுமேல் பாய்ஸ் ஆகிய மலையாள படங்கள் நல்ல வசூலைப் பெற்றுள்ளன.
இதனிடையே மலையாளப் படங்களின் வெற்றிக்கானக் காரணம் குறித்து பேசிய பிரபல மலையாள நடிகரும் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய படங்களில் நடித்து இருப்பவருமான பகத் பாசில், “இந்தாண்டு மலையாளப் படங்கள் பிரமாண்டமான வசூல் சாதனையை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரிலீசான ஒவ்வொரு மலையாள படமும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் கதை வித்தியாசமாக இருப்பதுதான். புதிய கதைகளைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள்.
இயக்குனர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது புதுசாக செய்யுங்கள். வசனங்கள், இசை இல்லாமல் சினிமா எடுக்கலாம். பிளாக் அண்ட் வொயிட்டில் புதுமையாக கூட படத்தைத் தயாரிக்கலாம்” எனக் கூறினார்.
– நன்றி தினந்தந்தி