Take a fresh look at your lifestyle.

தாய் கிழவி – பெண்களை உயர்த்திப் பிடிக்கும் படம்!

இயக்குநர் வசந்தபாலன்

என் தாத்தா இறந்த பிறகும் குறையாத வைராக்கியத்துடனும், கௌரவத்துடனும், டாம்பீகம் குறையாத சவுடால் குரலுடனும் அடுத்த 35 ஆண்டுகள் வாழ்ந்து தன் 85 வது வயதில் காலமான என் ஆச்சியை தாய்க்கிழவி நினைவுப்படுத்தினாள்.

திரையரங்கில் பல தாய்க் கிழவிகளைப் பார்க்க முடிந்தது.

தன் அம்மாக்களுடனும் ஆச்சிகளுடனும் பாட்டிகளுடனும் குடும்பம் குடும்பமாக திரையரங்களில் அவர்கள் சிரிக்கும் சப்தமும் அவர்களின் உச் கொட்டும் சப்தமும் கேட்கமுடிந்தது.

நெகிழ்ச்சியான திரையரங்க அனுபவத்தை எத்தனை ஓடிடி வந்தாலும் தந்துவிடமுடியாது. திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம். வெவ்வேறு மனிதர்களின் ஒன்று கூடல்.

திரையரங்கம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்த அழகான அற்புதமான கேளிக்கைக் கூடம்.

அது அழியாது. அதை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதே என் போன்ற ரசிகனின் வேண்டுகோள்.

நாம் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 34.22 ருபாய் பிடுங்கும் புக் மை ஷோ போன்ற ஆப்புகளிலிருந்து விடுதலையை ஏற்படுத்தித் தாருங்கள் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமே.

இந்த திரைப்படம் இத்தனை கவனம் பெற்றதற்கு ராதிகா அவர்கள் இந்த வேசம் ஏற்று நடித்ததும் ஒரு காரணம்,

தனுஷ் அவர்கள் வயது முதிர்ந்தவராக அசுரனில் நடித்தது தான் இது தனுசா எப்படி நடித்தார் என்று அந்த கதாபாத்திரத்தை நாம் உற்று கவனிக்க ஒரு காரணமாக அமைந்தது.

அது போன்று ராதிகா மேடம் எப்படி இந்த கிழவி கதாபாத்திரத்தைக் கையாண்டு இருப்பார் என்பதை காண்கிற கண்கள் திரையை விட்டு விலகவில்லை.

ஏதாவது ஒரு கிழவி இந்த கதாபாத்திரத்தை ஏற்றியிருந்தாலும் ஒன்றும் தவறில்லை. ஆனால், ராதிகா தன் உடல்மொழியாலும் குரலாலும் இந்த கதாபாத்திரத்திற்கு அத்தனை உயிர் கொடுத்திருக்கிறார்.

என்ன அலட்டலான உடல்மொழி அவர் தெருவில் நடந்து வரும் போது விபூதியை நெற்றியில் பூசும் போது உசிலம்பட்டி பாட்டிகள் நினைவுக்கு வந்தனர்.

தன் இத்தனை ஆண்டு அனுபவங்களை எல்லாம் மொத்தமாக திரட்டி ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்.

இதை எல்லாவற்றையும் தாண்டி திரைப்படம் பேசும் பெண்ணுரிமை, பெண்விடுதலை குறித்து திரை நட்சத்திரமாக அவரின் தொடர் உரையாடல்களும் நடிகையாக,

திரைப்படத் தயாரிப்பாளராக அவரது இருப்பை உறுதி செய்ய அவரின் இடையறாத திரையுலகப் போராட்டங்களும் இந்த கதாபாத்திரத்தோடு ஒரு கோணத்தில் ஒன்றிப் போகிறது.

ராதிகா மேடத்திற்கு தேசிய விருது பார்சல்.

தாய்க்கிழவி முகம், உடல் சுருக்கம், தண்டட்டி,பச்சை குத்தல் ஆடை வடிவமைப்பு எப்படியிருக்க வேண்டுமென எடுத்த முடிவுகள் கச்சிதம்.

பிராஸ்தடிக் மேக்கப்பின் வடிவம் சிறப்பானதாக இருந்தது அது தான் தாய்க்கிழவியை நம்முன் அழிக்க முடியாத கதாபாத்திரமாக மனதில் நிறுத்தியது.

பிராஸ்தடிக் மேக்கப்மேனும் விருதுக்கு தகுதியானவர்.அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் நம் ஊர் திறமையை அடையாளம் கண்டு உபயோகித்த இயக்குநருக்கு பாராட்டுகள்.

தாய்க்கிழவி திரைப்படம் கவனம் பெற்றதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்ததும் ஒரு காரணம்.

சின்ன திரைப்படங்களுக்கு கிடைக்கும் சிவா போன்ற நட்சத்திர கவனம் தான் பார்வையாளர்களை திரையரங்கம் நோக்கி ஈர்க்கும்.

திரைப்படங்கள் வாழவேண்டும் நினைக்கிற அத்தனை பெரிய நட்சத்திரங்களும் தவறாமல் சின்ன திரைப்படங்களுக்கு தங்களால் முடிந்தயளவு ஏதேனும் ஒரு பங்களிப்பை ஆற்றவேண்டியது கடமை என்றே கருதுகிறேன்.

திரைப்படத்தில் ராதிகா அவர்களைத் தாண்டி முனீஷ்காந்த், சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன் கதை நாயகர்களாக திரை முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.

கலை இயக்குநரே அந்த பல்லாங்குழி போதும் அது உங்கள் பெயர் சொன்னது.

கருப்பனிடம் வேண்டும் அந்த நடிகர் தனிஆவர்த்தனம் செய்கிறார்.

மதுரை மண்ணின் மணம் போகாத சுவாரஸ்யமான கதை சொல்லல் முலம் படம் நெடுக ஒரு உற்சாகமான மனநிலையை எழுத்திலும் இயக்கத்திலும் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் தன் முதல் படத்திலே சாதித்து காட்டியுள்ளார்.

அவருக்கும் மொத்த குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.