திரைத் தெறிப்புகள் – 21:
*
வணிக மயமான திரைப்பட உலகத்தில் இடையிடையே சில அபூர்வமான முயற்சிகளும் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன.
1960-ம் ஆண்டில் பல்வேறு தொழிலாளர்களின் கூட்டு முயற்சியில் இயக்குநர் நிமாய் கோஷால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘பாதை தெரியுது பார்’.
இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் எம்.பி.சீனிவாசன்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மிக மென்மையாக – காதை வருடுவதைப் போன்ற உணர்வுடன் ஒரு திரைப்படப் பாடலை எழுதியிருப்பவர் பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன்.
மிகச்சிறிய பாடல் தான்.
ஆனாலும் அந்தப் பாடலை பி.பி. ஸ்ரீனிவாஸூம், எஸ் ஜானகியும் இணைந்து பாடிய விதம் அவ்வளவு கனிவாக அமைந்திருக்கும்.
“தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது.
தன் பெட்டைத் துணையைத் தேடுது..”
– என்று நகரும் பாடல்..
“நீலமேகம் ஏழுவண்ண ஆடையோடு
உலாவுது.
வானை பூமி அழைக்குது.. தொடுவானில் இரண்டும் கலக்குது..
“நீலக்கடல் ஓலமிட்டு இங்கிருந்து கூவுது.
அருவி பாடி நடக்குது.
கடல் அலையை
கலக்கத் துடிக்குது…”
என்று நிறைவடையும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எம்பி. சீனிவாசின் இசை நம்மைப் பரவசப்படுத்தும் படியே அமைந்திருக்கிறது.
‘உன்னைப்போல் ஒருவன்’ போன்ற திரைப்படத்தை இயக்கிய எழுத்தாளரான ஜெயகாந்தன் அபூர்வமாக எழுதிய ஒரு சில திரைப்படப் பாடல்களில் இதுவும் ஒன்று.