நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம்!
எஸ்ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், புதுமையான ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’.
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்.டி.எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக் குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் நடிக்கின்றனர்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம்.
ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக எஸ்ஆர் புரொடக்ஷன் சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை அண்மையில் எளிமையான முறையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வஸந்த் சாய், “மிக மிகச் சந்தோஷமாக உள்ளது. எனது உதவி இயக்குநர் வாலி மோகன் தாஸ் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வது மகிழ்ச்சி.
ஷேன் நிகாம் ரசிகன் நான், அவரது மலையாளப் படங்களை நிறையப் பார்த்துள்ளேன் தமிழில் அவர் கண்டிப்பாக மிகச்சிறப்பாக வருவார்.” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, “இந்தக் கதை மிகச்சிறந்த கதை. இதில் எல்லோருக்குமே மிக நல்ல ரோல் இருக்கிறது. கலையரசன் இந்தப் படத்திற்குப் பிறகு, பெரிய இடத்தை அடைவார். ஒரு டீமாக இந்தப் படம் சிறப்பானதாக அமையும் என நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.


