Take a fresh look at your lifestyle.

மனிதநேயத்தை வலியுறுத்தும் ‘பாய்’ திரைப்படம்!

மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி ‘பாய்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா மற்றும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கியுள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே.ரோஷன் இசையமைத்துள்ளார். எடிட்டிங் இத்ரிஸ். இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், ‘பாய்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவின்போது பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீ நியா “பாய் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். இதில் நிறைய திருப்பங்களும் அழகழகான முடிச்சுகளும் இருக்கும். இன்றைய சமுதாயத்தில் நடக்கிற விஷயம் மட்டுமல்ல, நடக்கப் போவதையும் இப்படத்தில் கூறியிருக்கிறோம்.

தமிழ் சினிமாவிற்கு இந்தக் கதை புதிதாக இருக்கும். கொரோனா சவால்கள் எல்லாம் நிறைந்த காலத்தில் கடினமான நேரத்தில் இதை எடுத்தோம். படக்குழுவினர் கடினமாக உழைத்து தங்கள் உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்கம் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், “இந்தப் படத்தின் இயக்குநர் எப்படியோ இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இந்தத் தலைப்பை வாங்கிவிட்டார். இதன் ட்ரெய்லர் பார்க்கும்போது பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை தருகிறது. இந்தப் படத்தில் எல்லா நல்ல அம்சங்களும் உள்ளன. பணியாற்றிய அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர்” என்றார்.

படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத்தலைவருமான கே.ராஜன், “இந்த பாய் படத்தின் மூலம் படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர், இயக்கியுள்ள இயக்குநர், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் வெற்றி பெற வேண்டும். உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும்.

பாய் என்றால் சகோதரன் என்ற பொருள். நாம் அனைவருமே சகோதரர்கள். இந்தப் படமும் சகோதரத்துவத்தைத் தான் பேசுகிறது. இந்த உலகத்தில் சகோதரத்துவம் வளர வேண்டும். மனிதநேயம் வ ளர வேண்டும்.

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர். அதாவது கொடுப்பவன் பெரியவன். கொடுக்காதவன் கீழ்குலத்தோன் இவ்வளவுதான். வேறு எந்தப் பிரிவும் கிடையாது.

இது மாதிரி மேடைகளில் பேசும்போது எங்களுக்கு ஒளிவு மறைவு கிடையாது. வெளிப்படையாகத்தான் பேசுவோம். ஆனால் வாழ்த்த அழைக்கும்போது சுமாராக உள்ள படத்தைக் கூட வாழ்த்திவிட்டுத் தான் வருவோம். ஆனால் இதன் ட்ரெய்லர் நன்றாக உள்ளது.

உடுமலை நாராயணகவியின் கொள்ளுப்பேத்திதான் ஸ்ரீநீயாதான் இங்கே தயாரிப்பாளராக வந்துள்ளார்.

ஒரு முறை எம்.ஜி.ஆரிடம் நீங்கள் வாரி வாரி வழங்குகிறீர்களே என்று கேட்டபோது, அவர் அதற்கு காரணம் என் குருநாதர் என்எஸ்கே தான் என்றார். ஏனென்றால் என்.எஸ்.கே நாடகக் குழுவில் எம்ஜிஆர் மாத சம்பளத்தில் நடித்தவர். எம்.ஜி.ஆரே போற்றக்கூடிய அளவுக்கு வாரி வழங்கியவர் என்.எஸ்.கே. அவர் கடைசிவரை கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்தளவுக்கு மனிதநேயம் கொண்டவர்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்துவிடல் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உலகத்தில் யாருமே இதைச் சொல்லவில்லை. ஒருவனை பழிவாங்க அவனுக்கு நல்லதுதான் செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் தான் கூறினார்.

அப்படி மனிதநேயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உலகத்தில் சிறந்தது மனிதநேயம் தான் என்று அப்படி ஒரு அற்புதமான கருத்தை இந்தப் படம் கூறியுள்ளது. நல்ல படத்திற்குரிய அனைத்து தகுதிகளும் இந்தப் படத்திற்கு உள்ளன. படத்தின் தயாரிப்பாளர் நாயகன் இயக்குநர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் கமலநாதன் புவன்குமார், “இன்று படம் எடுப்பது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் முக்கியம். அது சிரமமானதும் கூட. அந்தப் பணியில் இருக்கும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

இதை நன்றி கூறும் விழாவாகத்தான் நான் பார்க்கிறேன். முதல் வார்த்தையே நன்றி என்று தான் கூற வேண்டும்.
நானும் நாயகன் ஆதவா ஈஸ்வராவும் நண்பர்கள். அவர் என்னிடம் பேசும்போது நீங்களும் வளருங்கள் நானும் வளர்கிறேன் என்று தான் சொல்வார். அப்படி சம மரியாதை கொடுப்பவர்.

நான் சோர்வடைந்த நேரத்தில் எல்லாம் என்னை அருகில் வைத்துக்கொண்டு ஊக்கப்படுத்துவார். எங்களிடம் இருப்பது நட்பைத் தாண்டிய நல்ல உறவு. இது தொடர வேண்டும். இந்தப் படத்திற்காக எத்தனை பேருக்கு நன்றி சொல்வது? அத்தனை பேரும் இந்தப் படத்திற்காக அந்த அளவுக்கு உழைத்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களை நண்பர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் அப்படி அமைந்தது ஒரு வரம் என்றுதான் நான் கூறுவேன்.

பாய் என்றால் சகோதரன் மட்டுமல்ல நண்பன் என்றும் சொல்லலாம். இது ஒரு NON-LINEAR வகை திரைப்படமாக உருவாகியிருக்கிறது. படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. மனிதநேயம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்கிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எதுவும் படத்தைப் பற்றி நான் கூற விரும்பவில்லை பார்த்துவிட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, “முதலில் இந்தப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் துறைக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன். பாய் என்று தலைப்பு வைத்து, அந்தப் படத்தை எப்படி சென்சாருக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஒரு வழியாக சென்சார் முடிந்துள்ளது அதற்காகப் பாராட்டுகிறேன்.

இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத்தான் இருக்கும்.

இஸ்லாமியர்களை நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் பழகுவோம். எல்லாருக்கும் ஒரு முஸ்லிம் நண்பர் இருப்பார். எங்கோ ஏதோ ஒரு இடத்தில் மதப்பிரச்சினை வந்தால் அதை அரசியலாக்கி விடுகிறார்கள். ஆனால் நாம் அப்படி நினைப்பதில்லை.

படத்தில் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் வருகிறது. மதம் என்பது மனிதனுக்கு அடையாளம் அல்ல. மனிதாபிமானம் தான் மதம். மனிதாபிமானம் இருந்தால் எந்த மதமும் தேவையில்லை.

தீவிரவாதி என்றாலே அவன் எந்த மதமும் கிடையாது. அவன் மனித ஜாதியே கிடையாது. அவன் மிருகஜாதி.
ஒரு குண்டு வைத்து 100 பேரைக் கொல்கிறான் என்றால் அவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது. இந்துவாக இருக்க முடியாது. வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க முடியாது.

அன்னை தெரசா கருணையின் உருவம். அவரை யாராவது ஒரு கிறிஸ்தவப் பெண்மணியாக பார்க்கிறோமா? அப்துல்கலாமை யாராவது இஸ்லாமியராகப் பார்க்கிறோமா? அவரை மனிதநேயம் உள்ள இந்தியனாகத் தான் பார்க்கிறோம்.

கர்மவீரர் காமராஜர் இந்துவாக பிறந்தவர் தான். ஆனால் அவரை யாராவது இந்துவாகப் பார்க்கிறோமா? மனிதநேயம் உள்ள ஒரு சிறந்த ஆட்சியாளராகத்தான் பார்க்கிறோம்.

மக்கள் இன்று எல்லாப் பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இதுபற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை.

ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா?. வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம் தான்.

மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான். அப்படிப் பார்க்கும்போது பாய் மிகச் சிறந்த படம். இந்தக் காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்.

இன்று குறைந்த முதலீட்டுப் படங்களும் நன்றாக இருந்தால் ஓடுகின்றன. நல்லப் படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு தந்து கொண்டாட வேண்டும்” என்றார்.

இதையடுத்து பேசிய நாயகன் ஆதவா ஈஸ்வரா,  “நாங்கள் எங்கள் உழைப்பை இந்தப் படத்திற்கு நூறு சதவீதம் கொடுத்துள்ளோம். திரை உலகத்தில் சிறிய படம் பெரிய படம் என்கிற பாகுபாடு தேவையில்லை.

இது ஒரு படம் அவ்வளவுதான். சிறிய படத்திற்கும் பெரிய படத்திற்கும் எல்லாருமே உழைக்கிறார்கள். அதைவெளியிடுகிற திரைகளின் எண்ணிக்கை தான் வேறுபடுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி எல்லாம் ஒன்றுதான். அந்த நிலையில்தான் இந்தப் படத்தை அனைவரும் எங்கள் உழைப்பைக் கொடுத்து எடுத்திருக்கிறோம்” என்றார்.