Take a fresh look at your lifestyle.

கவித்துவமான தலைப்பால் கவரப்பட்ட படம்!

டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.

காதல், தனிமை, வாழ்க்கையின் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தாயை இழந்து, சிறு வயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த இளைஞன் ஒருவன், மதுவுக்கு அடிமையாகி இருளான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கிறான்.

அவனது வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அந்தக் காதல் அவனை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு அழைத்துச் செல்கிறது என்பதுமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

மனதை வருடும் அருமையான கதையை மையமாகக் கொண்ட இந்தப் படம் செப்டம்பர் 4-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய கதாநாயகி மதுமிதா தாஸ்:

“பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. டீசரில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

சிறப்பான பாடல் வரிகளை வழங்கிய கார்த்திக் நேத்தா சாருக்கும், இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத் அவர்களுக்கும் நன்றி. ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

இந்தப் படத்திற்காக நிறைய உழைப்பையும், உணர்வுகளையும் கொடுத்திருக்கிறோம். படம் எப்படி ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இயக்குநர், தயாரிப்பாளர், கதாநாயகன் டி. ஆண்டனி பேசியவை:

“சென்னைக்கு வந்த புதிதில் சி.வி. குமார் சார் மூலம் ஹரிஷ், சந்தோஷ் ஆகியோர் அறிமுகமாகி, தயாரிப்பு பணிகளில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். தயாரிப்பு மேலாளர் விஜய் அண்ணாவும் படப்பிடிப்பு தொடக்கம் முதல் முடியும் வரை சிறப்பாக பணியாற்றினார்.

கதாநாயகி மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார்.

ஆலம் ஷா, நவ்யா, ராஜேந்திரன் சிங், மாதங்கி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

கலை இயக்குநர் சுரேந்தரன் அண்ணா கதாபாத்திரங்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் அறைகள் உள்ளிட்டவற்றை மிகச் சிறப்பாக வடிவமைத்தார்.

ஜெய்கார் ஹரிநாத் இசையமைப்பாளராக மட்டுமின்றி, லைவ் சவுண்ட் பணியிலும் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.

அசோக் ஸ்ரீதரன் இந்தப் படத்தின் இசைக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்ததுடன், கார்த்திக் நேத்தா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்களை இந்தப் படத்துடன் இணைக்க உதவினார்.

படத்திற்கான தலைப்பை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தபோது, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பை கார்த்திக் நேத்தா சார் கொடுத்தார்.

முதல் வரியிலேயே அந்த மேஜிக் நடந்தது. பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாக பாராட்டினர்.

அவருடைய வாழ்த்துகளும் தொடர்ந்து எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன.

என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தொகுப்பிலும் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சினிமா குறித்து அவர் பகிரும் வீடியோக்கள் மூலம் ஒரு புதுமுகமாக நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இந்தப் பயணம் மிகவும் கடினமானதாகவும், பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் இருந்தது. இன்று இந்தப் படத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.

இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”