Take a fresh look at your lifestyle.

கிடைத்தவர் பிரித்துக் கொண்டார், உழைத்தவர் தெருவில் நின்றார்!

204

திரைத் தெறிப்புகள் – 88 :

*

‘பாட்டுக்கு ஓர் படகோட்டி’ என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்குத் திரைப்படப் பாடல்களுக்குப் பேர்போன திரைப்படம் ஜி.என். வேலுமணி தயாரிப்பில் 1964-ல் வெளிவந்த ‘படகோட்டி’.

பிரகாஷ் ராவ் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி போன்றவர்கள் நடித்த இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் அப்போதைய இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும்.

மீனவர்கள் நலனுக்காகப் பாடுபடும் மீனவ இளைஞராக இதில் நடித்திருக்கும் எம்.ஜி.ஆர்., அந்த மக்களிடையே சமத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இப்படிப் பாடுவார்.

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை,
ஊருக்காகக் கொடுத்தான்…”

பாடலாசிரியர் வாலி திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே, இந்தப் பாடலை எழுதி வைத்திருந்ததாகச் சொல்லியிருப்பார். அந்தப் பாடல் இப்படத்தில் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா.
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா.
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை…”

இந்தப் பாடலை அழுத்தமாக பாடிய டி.எம். சௌந்தரராஜனின் குரல், கேட்கும் யாரையுமே வசப்படுத்திருக்கிற விதத்தில் அமைந்திருப்பதை, இப்போது கேட்டாலும் உணர முடியும்.

பட்டுக்கோட்டை, கண்ணதாசன் பாணியில் சமத்துவ உணர்வை வலியுறுத்தும் விதத்தில் அமைந்த இந்தப் பாடல் வரிகள் அவ்வளவு எளிய, ஆனால் வலிமையான வரிகளாக இருக்கும்.

“படைத்தவன் மேல் பழியுமில்லை.
பசித்தவன் மேல் பாவம் இல்லை.
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்.
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை..”

மீனவருக்கான உடையுடனும், தோளில் மீன் பிடி வலையுடனும், படகுகள், மரங்களைத் தாண்டி எம்.ஜி.ஆர்., பாடியபடி நடந்து வரும் வண்ணமயமான காட்சி இப்போதும் படத்தைப் பார்த்தவர்கள் மனதில் நிற்கிறது.

“இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்தபோதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்.”

என்று நிறைவடையும் இந்தப் பாடலில், “எது வந்தபோதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்” என்கிற வரிகள் எப்போதும் வாலி அவர்களுக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும்.

*

– மணா.

*