இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்களில் அவரைப் போலவே அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. சம்பள விஷயத்திலும் குருவை நெருங்கிக் கொண்டிருக்கிறார். ராஜா ராணி மூலம் டைரக்டராக அறிமுகம் ஆன அட்லீ, விஜய்க்கு தொடர்ச்சியாக மூன்று ‘ஹிட்’ களை அளித்தார்.
ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய முதல் இந்திப்படமான ‘ஜவான்’ ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
விஜய் – ஷாருக்கனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருப்பதாக அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் அஜித்துக்காக மாஸ் கதை ஒன்று தயார் செய்து வைத்துள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டி:
‘ராஜா ராணி’ படத்தை இயக்கும் பூர்வாங்க ஏற்பாடுகளில் இருந்தபோது அஜித்தை ‘ஆரம்பம்’ ஷுட்டிங்கில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்த படப்பிடிப்பின் போது, நயன்தாராதான் எனக்கு அஜித்தை அறிமுகம் செய்து வைத்தார்.
‘பள்ளிக்கூட படிப்பை முடிச்சிட்டீங்களா?’ என ஜாலியாக பேச ஆரம்பித்தார், அஜித்.

அற்புதமான மனிதர். அவருடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அவருக்காக மாஸ் கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன்.
அஜித் சார் ஓகே சொன்னால் படத்தை ஆரம்பித்து விடலாம். அவரது அழைப்புக்கு காத்திருக்கிறேன்’ இவ்வாறு உற்சாகமாக தெரிவித்தார், அட்லீ.
அஜித் இப்போது அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
– பாப்பாங்குளம் பாரதி.