குறிப்பிட்டுச் சொல்லுவார்.
ஜெமினி, பத்மினி, வைஜெயந்திமாலா நடித்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி, மூன்றாவது தலைமுறையினரும் இப்போது வந்துவிட்டார்கள். அவர்களுக்கு, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தைத் தெரியாது.
ஆனால் ’கண்ணும் கண்ணும் கலந்து’ என்று பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் ஆடுகிற போட்டி நடனப்பாடலுக்கு நடுவே, ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பி.எஸ்.வீரப்பா, ‘சபாஷ்… சரியான போட்டி’ என்று சொன்னதை இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, என்.டி.ஆர்., ஜெயலலிதா முதலானோருடன் சினிமாவிலும் நாடகங்களிலும் தொடர்பு கொண்டவராகத் திகழ்ந்த பி.எஸ்.வீரப்பா, பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எனும் பேனரில் பல படங்களைத் தயாரித்தார்.
எம்ஜிஆர், மாஸ்டர் கமலஹாசன், தேவிகா நடித்த ‘ஆனந்த ஜோதி’, எஸ்.எஸ்.ஆர், சரோஜாதேவி, விஜயகுமாரி நடித்த ‘ஆலயமணி’, சிவாஜி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ என எண்ணற்ற படங்களைத் தயாரித்தார்.
எண்பதுகளில், விஜயகாந்த் முதலான நாயகர்களையும் பயன்படுத்தி படங்களைத் தயாரித்தார். ‘திசை மாறிய பறவைகள்’ எனும் படத்தைத் தயாரித்ததில் தயாரிப்பாளர் எனும் முறையில் மிகப்பெரிய மரியாதையையும் பெற்றார் பி.எஸ்.வீரப்பா.
ஜெய்சங்கரை வைத்து தயாரித்த ‘யார் நீ’ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் இரண்டு படங்களைத் தந்தார்.
இரண்டு படங்களிலும் விஜயகாந்த் நாயகனாக நடித்தார்.
இராம.நாராயணன் அவர் தயாரிப்பில் மூன்று படங்களை இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, இந்திப் படத்தையும் தயாரித்தார்.
மிகப்பெரிய நடிகராக வலம் வந்த ராமராஜனின் முதல் இயக்கமான ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தைத் தயாரித்தவரும் பி.எஸ்.வீரப்பாதான்!
வீரப்பா போன்ற கலைஞர்களை நம்முடைய அரசாங்கமும் தமிழ்த் திரையுலகமும் இன்னும் முறையாகவும் உரிய முறையில் கெளரவமாகவும் கொண்டாடவில்லையோ என்றே தோன்றுகிறது. வருத்தமாகத்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
தன் குரூரமான பார்வையாலும் தமிழை ஒருவித இறுக்கத்துடன் பல் கடித்துப் பேசுகிற ஸ்டைலாலும் கொக்கரித்து ஆர்ப்பரிக்கும் சிரிப்பாலும் நம்மையெல்லாம் கொள்ளை கொண்ட பி.எஸ்.வீரப்பா, 1911 அக்டோபர் 9-ம் தேதி பிறந்தார். 1998-ம் ஆண்டு, நவம்பர் 9-ம் தேதி மறைந்தார்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்… வெறித்தன சிரிப்பால், தெறிக்கவிட்ட வில்லன் பி.எஸ்.வீரப்பாவை மறக்கவே மாட்டார்கள் ரசிகர்கள்!
- நன்றி: காமதேனு இதழ்