90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஆர்த்தி தேவியாக இருந்த இவரை சுகன்யாவாக மாற்றியவர் இயக்குநர் பாரதிராஜா தான்.
பின்னர், சின்ன கவுண்டர், கோட்டை வாசல், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் என நிறைய வெற்றிப் படங்களில் நடித்தார்.
அதோடு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், சன் டிவி-யில் ஆனந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2002-ல் ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சுகன்யா, அடுத்த ஆண்டே கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில், நடிகை சுகன்யா ஒரு யூட்யூப் சானாலுக்கு பேட்டி அளித்தபோது, அவர் தன்னோடு நடித்த நடிகர்கள் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
‘சின்ன கவுண்டர்’ திரைப்படம் குறித்து பேசுகையில், “இந்தப் படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதில் நடித்தவர்கள் அனைவரும் பெரும் கலைஞர்கள். விஜயகாந்த் சார் அவ்வளவு தன்மையான மனிதர்.
மனோரமா அம்மா எப்பேர்ப்பட்ட ஆர்ட்டிஸ்ட், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொண்டதே இல்லை.
அவரோடு எனக்கு இருந்த முதல் காம்பினேஷன் ஸீன் எடுக்கும்போது முதல் நாள் படப்பிடிப்பு, அன்று அவரது கார் வர தாமதம் ஆகியது, நல்ல நேரம் போய் விட கூடாது என்பதால், என் டயலாக்ஸ் மட்டும் தனியாக எடுத்து படப்பிடிப்பை தொடங்கினார்கள்.
அதுதான் நானும் அவரும் சண்டை போடும் காட்சி.
கவுண்டமணி சாரும் செந்தில் சாரும் ஸ்பாட்டிற்கு வந்தாலே சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
அங்கு கூடி இருக்கும் மக்கள் அவர்களுடைய ஏதோ ஒரு காமெடியை சொல்லிச் சொல்லி சிரித்து கொண்டு இருப்பார்கள்.
கவுண்டமணி சார் செந்திலை படங்களில் தான் திட்டுவார், நேர்ல எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடிய நபர் அவர்.
மிகவும் மரியாதையானவர், அதற்கு முன்னதாகவே அவருடன் ஞானப்பழம் என்ற பாக்யராஜ் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பேன். அப்போதிலிருந்தே நல்ல நட்பு எங்களுக்குள் உண்டு.”
– நன்றி: ஏபிபி நாடு