அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ‘பிளாஸ்ட்’ படத்தை சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கே, எஸ். கணேஷ், எஸ். சுரேஷ் தயாரித்துள்ளனர்.
ரவி பஸ்ரூர் இசையில், அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவில் தயாராகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த இதற்கான அறிமுக விழாவில் பேசிய அர்ஜூன்:
‘பிளாஸ்ட்’ படத்தில் முதல்முறையாக கராத்தே மாஸ்டராக நடித்துள்ளேன். எனது வாழ்க்கையில் அறிமுக டைரக்டர்களின் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் சுபாஷ், நினைத்ததை என்னை வைத்து சாதித்து முடித்திருக்கிறார்.
படம் தொடங்கும்போது அபிராமி மலையாளத்தில் மட்டுமே என்னிடம் பேசுவார். போகப்போக சரளமாக தமிழில் பேசத் தொடங்கிவிட்டார். நடிப்பில் அவர் மேம்பட்டு விட்டார். நல்ல பாடகியும் கூட.
அதேபோல பிரீத்தி சண்டைக் காட்சியில் கலக்கி இருக்கிறார். எனக்கே ‘டப்’ கொடுப்பாரோ… என்று பயந்துவிட்டேன்” என்றார்.
‘பிளாஸ்ட்’ படத்தைப் பற்றி பேசிய அபிராமி; “26 ஆண்டுகளுக்கு பிறகு (‘வானவில்’ படத்துக்கு பிறகு) அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன். ஏன் இத்தனை நாட்கள் நாங்கள் ஜோடி சேரவில்லை? என்று புரியவில்லை. இருந்தாலும் இந்தமுறை நடந்திருப்பது மகிழ்ச்சி”, என்றார்.