Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுகக் குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் பா ரஞ்சித்:
தயாரிப்பாளர் கிடைக்காமல் அலைந்த மாரி இன்று தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் எனும் கனமிக்க படைப்புடன் வந்த மாரி, தன் சொந்த தயாரிப்பில், தன் மனதுக்குப் பிடித்த ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருப்பான் என நினைக்கிறேன்.
இப்போது கண்டண்ட் உள்ள படங்களை வெளியிடுவதும், டிஜிட்டல் ரைட்ஸ் விற்பதும் இப்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதில் ஹாட் ஸ்டார் தயாரித்ததால் மாரி தப்பிவிட்டார் என்றே நினைக்கிறேன்.
இப்போது சினிமாவில் நல்ல படங்களை வெளியிடுவதில் உள்ள பிரச்சனைகளை அனைவரும் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் நல்ல இசையைத் தந்துள்ளார்.
படக்குழு நல்ல உழைப்பைத் தந்துள்ளனர். இயக்குநர் ராம், மாரியின் வழிகாட்டியாக இருக்கிறார். வாழை மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ராம்:
2018-ல் இதே மேடையில் நீலம் புரடக்ஷன் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ ஆரம்பித்தது. அதே மேடையில் நிவி ஸ்டுடியோஸ் ஆரம்பிக்கிறது வாழ்த்துகள். என்னுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியது மாரி தான்.
அவனுடன் மலை ஏறும்போது அவனுள் கொட்டிக்கிடக்கும் பல கதைகளைச் சொல்வான். மலையேறும் போது மிகப்பெரிய துணையாக அவன் இருப்பான். மலையேறுவது அவன் மரபணுவில் இருக்கிறது.
பரியேறும் பெருமாளுக்குப் பிறகு அவன் பல மலைகள் ஏறிக்கொண்டே இருக்கிறான். அவன் பேசிக்கொண்டே இருப்பான். அதை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும், அது காலத்தின் கட்டாயம். அவன் இன்னும் பல உயரம் அடைய வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்:
2011-ல் நானும் ரஞ்சித்தும் அட்டகத்தி ரிலீஸ் பண்ண 6 லட்சம் வேண்டி நின்றோம். அது வாழ்நாள் முழுதும் உழைத்தாலும் கிடைக்காத பணம் அப்போது. அதன் பிறகு ரஞ்சித் வளர்ந்து, கபாலி வரை கூட்டி வந்தார். உன் டீமை மட்டும் என்றும் விட்டு விடாதே என்றார்.
அவர் தான் பரியேறும் பெருமாள் படம் பற்றிச் சொன்னார். இந்த இடத்தில் தான் பரியேறும் பெருமாள் பற்றி நிறையப் பேசினேன். இப்போது ‘வாழை’க்காகப் பேசுகிறேன்.
இந்தப் படம் உணர்வு ரீதியாக என்னை மிகவும் பாதித்தது, பார்த்தவர்கள் எல்லோரிடமும் அந்தப் படத்தைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

பரியேறும் பெருமாள் போலவே ‘வாழை’யை பார்த்தும் வியந்து விட்டேன். இந்தத் திரைப்படம் தமிழ் சினிமா 5 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்.
இங்கிருக்கும் கலைஞர்கள் எல்லோரும் மக்களிடம் தாக்கத்தை உண்டு செய்யும் கலைஞர்களாக வளர்ந்திருக்கிறோம். கலை மூலம் மிகச்சிறந்த படைப்புகளை உங்களுக்குத் தருவோம்.
50 படங்களை நான் கடந்து இருக்கிறேன். நீங்கள் தந்த வரும் ஆதரவிற்கு நன்றி” என்றார்.