சென்னை:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மிகப்பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு பிறந்த பேரனாக அதர்வா வருகிறார். தனது சொந்த ஊருக்காக பல கபடி போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி வாகை சூடும் ராஜ்கிரண் ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். கபடி விளையாட்டு வீரரான ராஜ் கிரணுக்கு அந்த ஊர் கிராமம் சிலை வைத்து வழிபாடு செய்யும் அளவிற்கு மரியாதைக்குரிய மனிதராக மிளிர்கிறார். . அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் சில பிரச்சனைகளால் ராஜ் கிரண் குடும்பத்திடமிருந்து பிரிந்து வாழ்கிறார்கள்., ராதிகாவின் பகையால் பேரன் அதர்வாவை ராஜ்கிரண் மற்றும் அவரது குடும்பத்தார் ஒதுக்கி வைக்க, இந்த சூழ்நிலையில் எப்படியாவது தனது இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க அதர்வா போராடுகிறார்.
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊருக்காகக் கபடி விளையாடி வரும் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். அதே ஊர்க்காரர்கள் ராஜ்கிரண் மீது வீணான பழி சுமத்தி அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள். இதனை நிரூபிப்பதற்காக அதர்வா போராடி, தாத்தா ராஜ்கிரண் குடும்பம் மீது விழுந்த பழியை போக்க களம் இறங்குகிறார். ஊர் மக்கள் மத்தியில் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சவால் விடுகிறார். இந்த சூழ்நிலையில் தன் குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து ஒரு கபடி குழுவை உருவாக்குகிறார். இறுதியில் தன் குடும்ப குழுவை வைத்து ஆடும் கபடி போட்டியில் அதர்வா வெற்றி பெற்றாரா? தாத்தா குடும்பம் மீது ஏற்பட்ட பழியை போக்கினாரா? என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் பாசமிக்க பேரனாக அதர்வா நடித்திருக்கிறார். தாத்தா, பெரியப்பா,மாமா ஆகியோர் ஒதுக்கினாலும் திரும்பத் திரும்ப அவர்களோடு சேர நினைக்கிறார். இக்காலத்தில் அரிதாகிப் போன உணர்வுகளை மிக சிறப்பாக காட்டி நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா, அந்த கதாபாத்திரத்தை மிகச் சரியாகவே செய்திருக்கிறார். கபடி களத்தில் எதிராளிகளை பாய்ந்து விரட்டும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் திறம்பட நடித்திருக்கிறார்.
மூத்த கபடி வீரர் பொத்தாரி என்பவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர் பெயரை ராஜ்கிரணுக்கு வைத்திருக்கிறார்கள். அவரும் அதற்கு எவ்விதக்குறையும் வந்துவிடாமல் நடித்திருக்கிறார்.கபடி வீரர், குடும்பத் தலைவர் என பல பரிணாமங்களில் ராஜ் கிரண் கலக்கி இருக்கிறார். கபடி விளையாடும் இடங்களில் கைத்தட்டல்களை பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் புதுமுகம் என்றாலும். கபடி வீராங்கனையாக சிறப்பாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலிக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், துரைசுதாகர், சிங்கம்புலி,செந்தி, ராதிகா, சத்ரு, ரவி காளே, பால சரவணன், ஆர்.கே.சுரேஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், அனைவரும் கதையோடு பயணிப்பதால், அவர்களுடைய கதாபாத்திரத்திற்க்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
ஏகப்பட்ட நடிகர், நடிகைகளை வைத்துக்கொண்டு இப்படி சவால் மிகுந்த ஒரு கதையை, கபடி விளையாட்டை மையமாக வைத்து, அதை மிக திறம்பட குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம் அவர்களை பாராடியே தீர வேண்டும். எந்தவித சலிப்பும் ஏற்படுத்தாமல் காதல், ஆக்ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று படத்தின் கதையை நகர்த்தி செல்வது பாராட்டுக்குரியது.
லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவில் தஞ்சை மாவட்ட கிராமங்களின் இயற்கை எழில் மிகுந்த அழகை மிக சிறப்பாக படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் பலம் என்றாலும். பின்னணி இசை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறது.
மொத்தத்தில், ‘பட்டத்து அரசன்’ படத்தை பார்த்து மகிழலாம்.
திரைநீதி செல்வம்.