திரைத் தெறிப்புகள் – 58 :
*
சென்னை நகருக்கான பிரத்தேயகமான வட்டார மொழியை மிகவும் அபூர்வமாகவே திரைப்பட இசையில் கேட்க முடிந்திருக்கிறது.
சந்திரபாபு, தான் பாடிய சில பாடல்களில் அதைப் பிரதிபலித்திருக்கிறார்.
குறிப்பாக, “நான் ஒரு முட்டாளுங்க…” என்று துவங்கும் பாடலிலும் சென்னை வட்டார மொழியைப் பேசியிருப்பார் சந்திரபாபு.
அதைத் தொடர்ந்து 1968-ம் ஆண்டில் வெளிவந்த ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷையிலேயே இந்தப் பாடல் நகர்ந்திருக்கும்.
அப்படி நகரும் இந்தப் பாடலை தனது பாணியில் வெகு ‘அசால்ட்’டாகப் பாடியிருப்பார் நடிகையும், அபூர்வமான பாடகியுமான மனோரமா.
“வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உட மாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டே கொக்கு…”
– என்று துவங்கும் இந்தப் பாடலுக்கு மிகவும் ரசிக்கும்படி இசையமைத்திருப்பார் வி. குமார்.
மெட்ராஸ் பாஷையில் புழங்கும் சொற்களை வைத்து இடியாப்பாம் பிழிவதைப் போல ஒரு பிழி பிழிந்திருப்பார் ஸ்ரீரங்கத்துக்காரரான கவிஞர் வாலி. அதைப் பாடி ஜமாய்த்திருப்பார் காரைக்குடி பின்புலம் கொண்ட ‘ஆச்சி’யான மனோரமா.
“வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்.
லவ்வாப் பாத்து சோக்காப் பேசி
டேக்கா குடுத்தே பின்னாலே.
சர்தான் வாம்மா கண்ணு ..
படா பேஜாராச்சு நின்னு…”
– என்றபடி பாடல் நகரும்போது திரையில் ரௌடியாக வரும் சோ, கைலி – ஜிப்பாவுடன் அடக்க ஒடுக்கமாக நடக்க, கம்பீரமாக பாடியபடியே, ஜோரான நடை நடந்து வருவார் மனோரமா.
சென்னைக்கான வட்டார மொழி குறித்த ஆய்வ பண்ணுகிறவர்கள் தவறவிடக்கூடாத பாடல் இது.
“நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்டா பண்ணி நாளாச்சு.
மச்சான் ஒன். மூஞ்சப் பாத்து சால்னா நெனப்பு வந்தாச்சு.
அட மச்சான்…
மச்சான் ஒன் மூஞ்சப் பாத்து சால்னா நெனப்பு வந்தாச்சு.
ஆயா கட இடியாப்பம் நான் பாயா கறியும் நீயாச்சு…”
இத்திரைப்படம் வெளிவந்தபோது அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பில் இடம்பெற்ற துள்ளல் இசைப்பாடல் என்று இதைச் சொல்லலாம்.
பல மொழிச் சாயல்கள் ஊடுருவி இருந்தாலும், சென்னையில் தற்போது ஆபூர்வமாகிவிட்ட, பார்க்கிற யாரிடமும் உரிமைக் கொண்டாடுகிறபடி அமைந்திருக்கும் இந்த எளிய மக்கள் மொழியும், பாடலும் தனி அழகு தான்.
-மணா.
*