Take a fresh look at your lifestyle.

தமிழில் பாடல்கள் இல்லாத முதல் திரைப்படம்!

106

தமிழ் சினிமாவில் இப்போது பாடல்கள் இல்லாமல் திரைப்படங்கள் வெளிவருகின்றன.

ஆனால், பாடல்கள்தான் சினிமாவுக்கு முக்கியம் என்ற காலகட்டத்தில், அதாவது ஒரே படத்தில் பல பாடல்கள் இருந்த காலத்திலேயே, பாடல்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட படம், ‘அந்த நாள்’.

ஹாலிவுட் தரத்துக்கு என்று சொல்வார்களே, அந்தக் காலத்திலேயே அப்படியான தரத்தில் உருவாக்கப்பட்ட படம் இது. 1954 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை எஸ். பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.

சிவாஜி கணேசன், பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், டி.கே.பாலசந்திரன் உட்பட பலர் நடித்த இந்தப் படம், அகிரா குரோசேவாவின் ‘ரோஷோமான்’ படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டது.

திரைப்படவிழா ஒன்றில் ‘ரோஷோமான்’ படத்தைப் பார்த்த இயக்குநர் எஸ்.பாலச்சந்தர், அதே கதை சொல்லும் ஸ்டைலில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கி இருந்தார்.

ஆல் இண்டியா ரேடியோவுக்காக அவர் எழுதிய இந்தக் கதை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஏவி.மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தார்.

அப்போது பாடல்கள், சண்டைக்காட்சிகள், நடனம் ஏதும் இல்லாமல் படத்தை உருவாக்க முடிவு செய்தார், இயக்குநர் எஸ்.பாலச்சந்தர்.

அதை ஏற்றுக்கொண்டார் ஏவி.மெய்யப்ப செட்டியார். ஜாவர் சீதாராமன் திரைக்கதையை எழுதி, துப்பறியும் அதிகாரியாகவும் நடித்தார்.

பாடல்கள், நடனக் காட்சிகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான்.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜப்பான் படைகள் அப்போதைய மெட்ராஸில் குண்டு போடுகிறது.

மறுநாள் காலையில், ரேடியோ என்ஜினீயரான ராஜன் (சிவாஜிகணேசன்) கொல்லப்படுகிறார்.

அதை போலீஸ் அதிகாரி துப்பறியும் கதைதான், படம். 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

பாடல்கள் இல்லாதது, ரசிகர்களுக்குப் பெருங்குறை. பிறகு இந்தப் படம் 1955 ஆம் ஆண்டு மறு ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படம் வரவேற்பைப் பெற்றது.

– அலாவுதீன்.

#தமிழ்சினிமா #Tamilcinema #அந்தநாள் #Andhanaal #எஸ்_பாலச்சந்தர் #S_Balachandar #ஆல்_இண்டியா_ரேடியோ #All_india_radio #ஏவி_மெய்யப்ப_செட்டியார் #AV_Meiyappa_chettiyar #ஜாவர்_சீதாராமன் #Jawar_Sitaraman #சிவாஜி_கணேசன் #Sivaji_ganesan #பண்டரிபாய் #Pandaribai