ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2011-ம் ஆண்டில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, மனதை கணக்க செய்த சாரா அர்ஜூனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
‘சித்திரையில் நிலாச்சோறு’, ‘சைவம்’, ‘விழித்திரு’, ‘சில்லுக் கருப்பட்டி’ போன்ற படங்களிலும் நடித்தார்.
அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்றவர், அங்கு பிசியாகிப் போனார். அவ்வப்போது மலையாளம், தெலுங்கிலும் நடித்தார்.
சிறிய இடைவேளைக்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளவயது நந்தினியாக நடித்துக் கவனம் ஈர்த்தார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக, அதாவது கதாநாயகியாக களமிறங்கினார் சாரா அர்ஜூன்.
எதார்த்தமான நடிப்பு, அழகான சிரிப்பு, காதல் ரசம் சொட்டும் பேச்சு என ரசிகர்களை கிறங்கடித்தார்.
ரன்வீர் சிங் – சாரா அர்ஜூன் காதலில் மயக்கும் ‘கேரா ஹூவா…’ என்ற பாடல் அடிக்கடி கேட்கும் பாடலாகவும் அமைந்து கவனம் ஈர்த்தது.
தற்போது சாரா அர்ஜூன் நடிப்பில் ‘துரந்தர்-2’ படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதையடுத்து ‘யூபோரியா’ உள்பட 4 படங்களில் சாரா அர்ஜூன் பிசியாக நடித்து வருகிறார். ‘துரந்தர்-2 படத்தில் அவரது சம்பளம் மட்டுமே ரூ.2 கோடி என்று பேசப்படுகிறது.
இதற்கிடையில் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்க சாரா அர்ஜூன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதாவது, கதாநாயகியாக அவர் ‘என்ட்ரி’ கொடுக்கவுள்ளாராம். குறிப்பாக தமிழில் முன்னணி இயக்குநரின் படத்தில், வளர்ந்து வரும் வாரிசு நடிகரின் மகன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க சாரா அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
தற்போது சாரா அர்ஜூன் பாலிவுட் பக்கம் பிசியாக இருப்பதால், 68 நாட்கள் ‘கால்ஷீட்’ உடன்படிக்கையை ஏற்க, கொஞ்சம் யோசித்து வருகிறாராம்.
இதனால் ‘கால்ஷீட் நாட்களைக் குறைத்து, ஜூன், ஜூலை மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கவும் தயார் என படக்குழு சார்பில் கேட்டிருக்கிறார்களாம். இதற்கு சாரா அர்ஜூன் தரப்பில் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
இந்த புதிய படத்தை ஏற்கும் பட்சத்தில், இதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கால்பதிக்க உள்ளார் சாரா அர்ஜூன்.