நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’.
மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன், படக்குழுவினரை வாழ்த்தியதுடன் படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கிருஸ்துதாஸ், எனக்கு சிறு வயதிலிருந்து படம் பார்க்க வேண்டும், படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை.
ஆனால், நாம் எடுக்கும் படம் சாதாரணமாக இருந்து விடக்கூடாது, சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது, கிடைத்த கதை தான் இது.
இந்த இருப்பதோராவது நூற்றாண்டிலும், காதலிக்கும் காதலர்களுக்கு இருக்கும் ஜாதிய சமூகப் பிர்ச்சனையை, எங்களின் இந்தப் படத்தில் அழுத்தமாக பேசியுள்ளோம்.
அண்ணன் திருமாவின் கையால் இந்த இசை விழா நடக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அண்ணன் வந்து வாழ்த்தியது எங்களுக்குப் பெருமை. அனைவருக்கும் நன்றி என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பிளஸ்ஸோ ராய்ஸ்டன், இப்படம் 6, 7 ஆண்டுகள் கஷ்டபட்டு கிடைத்த வாய்ப்பு. நாம் ஒரு படம் செய்தாலும் அதில் சோஷியல் மெசேஜ் இருக்க வேண்டும் என்று தான் இப்படத்தை எடுத்தோம்.
நானும் என் நண்பர் கவிதினேஷ்குமார் அவர்களும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என சொல்லி வைத்திருந்தோம்.
அதே போல் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நாங்கள் இருவரும் பேசியபோது, உலகம் முழுக்க இருக்கும் இந்தப் பிரச்சனையை ஒரு வீட்டுக்குள் நடப்பதாக செய்வோம் என்று தான் இந்தக் கதையை உருவாக்கினோம் என்றார்.
இதையடுத்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மகாகவி பாரதி பாடிய வரிகளில், மிக முக்கியமானது நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில், இந்த நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வரிகள். அந்த வரியை தலைப்பாக வைத்த படக்குழுவிற்கு வாழ்த்துகள்.
நிலையான மனம், நிலை இல்லாதவனை குறிக்கும் இந்த வரிகள், ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் இந்தப் பாடல் மானுட உளவியலை பற்றிய முக்கியமான பாடல்.
மகாகவி எந்த பொருளில் ஆதங்கப்பட்டானோ அந்த கருத்தில் இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ஒரு படம் எடுத்தாலும் சோஷியல் மேசேஜ் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையை தயாரிப்பாளர் சொன்னார். சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
காதல் உலகம் முழுக்க இருக்க கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும். இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாக பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக பார்க்க வேண்டும்.
காதல் எல்லா மனிதருக்கும் இருக்கிறது. காதல் இயல்பான பண்பு. அதை ஆர்டிஃபிஷியலாக உருவாக்கி விட முடியாது. அது ஆழமான உணர்வு, நுட்பமான உணர்வு. காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தான் முக்கியம்.
அதை கலைஞர்கள் நுட்பமாக கவனித்து அதை சமூகத்திற்கு முக்கியமான படைப்பாக மாற்ற வேண்டும்.
கல்யாணத்திற்கு பிறகான பிர்சசனையை ஆணவக்கொலையை மையப்படுத்தி, தங்கள் பார்வையில் படைப்பாக்கியிருக்கிறார்கள்.

இது கௌரவக்கொலை அல்ல, வறட்டு கௌரவக்கொலை என்று தான் நான் குறிப்பிடுவேன். தான் பெற்றெடுத்த அன்பான பிள்ளைகளை கொலை செய்வது வறட்டு கௌரவக்கொலை தான்.
ஆணவக்கொலை, சிசுக்கொலை இந்தியாவில் தான் அதிகம்.
இந்த இரண்டையும் நாம் அழித்து ஒழிக்க வேண்டும். பாலின பாகுபாடு இல்லாமல், சம உரிமை தரும்போது தான் இந்த நிலை மாற வேண்டும்.
ஏற்கனவே பல படங்கள் எடுத்தாலும் இன்னும் இன்னும் பல படங்கள் இந்த கருத்துக்களை பேச வேண்டும். காதலை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது நம் சோஷியல் அமைப்பு தான் காரணமாக இருக்கிறது.
நம் விருப்பம் இல்லாமலேயே நம் மீது ஜாதி சமூக முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு சமூகம் ஒரு மிகப்பெரும் அழுத்தத்தை தந்து விடுகிறது. காதல் அவர்களுக்கு தரும் அழுத்தம் தான் அவர்களை ஜாதி தாண்டிய காதலை குற்றமாக பார்க்க வைக்கிறது.
இதில் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். இதை விவாதிக்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அதை சரியாக சிந்திக்கும் படைப்பாளிகளால் தான் இந்த படைப்பை தர முடியும். உரையாடலுக்கு உற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும்.
இப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். இப்படம் பெரிய வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
அன்பே வா, பாவம் கணேசன், சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
கதாநாயகிகளாக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கிங்மேக்கர் கிறிஸ்துதாஸ் இந்தப் படத்தில் வில்லனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.