பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா ‘ஜோஸ்’ திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் பிரபலமான அவர், உடன் நடித்த சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.
நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதன் பிறகு, நாக சைதன்யாவும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இருவீட்டார் ஆசியுடன் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.
இதில், தெலுங்குத் திரையுலகினர் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
இதனிடையே, இந்த திருமணம் குறித்து நாகார்ஜுனா நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “இந்த அழகான அத்தியாயத்தை சோபிதாவும், சைதன்யாவும் ஒன்றாக தொடங்குவதைப் பார்ப்பது என்பது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது.
என் அன்புக்குரிய சைதன்யாவுக்கு வாழ்த்துக்கள். சோபிதா, எங்கள் குடும்பத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

ஏற்கனவே, நீங்கள் எங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்துவிட்டீர்கள்.
அக்கினேனி நாகேஸ்வர ராவின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட அவரின் திருவுருவ சிலையின் ஆசீர்வாதத்தின் கீழ் நடந்த இந்த அற்புதமான திருமணம் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவரது அன்பும் ஆசியும் வழிகாட்டுதலும் நம்முடன் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.
இன்று நம் மீது பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.