Take a fresh look at your lifestyle.

நான் சந்தித்த மனிதர்களின் பாதிப்பு தான் என்னுடைய படங்கள்!

-'சேவகர்' பட விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’. இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே பாக்யராஜ், “சினிமா ஆசை யாரையும் விடாது என்பது பற்றி யோசிக்கும் போது ஒன்று நினைவு வருகிறது.

ஏற்காட்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு டாக்டர். மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். 

அவர் வீட்டில் மிருதங்கம் வைத்து வாசித்துக் கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்.

சினிமா ஆர்வத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தபோது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஓடி வந்தவர். அப்பா அவருக்காக பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருந்தார். ஒரு வழியாக அவரைச் சமாதானப்படுத்தி படிக்க வைத்து டாக்டர் ஆக்கி இருக்கிறார்.

அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவர் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு நான் ராசுக்குட்டி படத்தில் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க வைத்தேன். அவருக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி – அதுவும் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடித்தது மிகமிக மகிழ்ச்சி.

அதே போல் லால்குடி முனுசாமி என்பவர் இன்னொரு ரசிகர். அவரை எல்லாரும் ஊமை என்பார்கள். அவர் என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வருவார்.

உதட்டு அசைவை வைத்து என்ன பேசுவது என்று கண்டுபிடிக்கும் லிப் ரீடிங் நன்றாக வரும். சரியாகச் செய்வார்.

அவரை பவுனு பவுனுதான் படத்தில் டி.டி.ஆர் ஆக நடிக்க வைத்து என்னிடமே பேச வைப்பது போல் ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன். நான் எழுதிக் கொடுத்தபடியே உதட்டு அசைவு செய்தார்.

“டிக்கட் இல்லாமல் வந்திருக்கிறாயே” என்று என்னுடன் அவர் பேசுவது போன்ற காட்சி. அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து படத்தில் காட்டினோம். படமாக வந்தபோது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியம். அவர் எப்படிப் பேசினார் என்று. இப்படி சினிமாவில் நிறைய நிஜ கேரக்டர்களைச் சந்தித்து இருக்கிறேன்.

இங்கே இசையமைப்பாளராக இருக்கும் மோகன் எனக்கு சிங்கு என்றுதான் பழக்கம். பல ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் வலம் வந்தவர். ஏவிஎம் ஸ்டுடியோவையே சுற்றிச் சுற்றி வருவார்.

எப்படியாவது ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். பல ஆண்டுகள் இருந்தவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நான் அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருந்தேன். படத்தின் பெயர் 35. அதில் பெரிய கதாநாயகனோ, பெரிய நடிகர்களோ கிடையாது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதை. சின்னச் சின்ன சராசரியான நடிகர்களை வைத்து தான் எடுத்திருந்தார்கள்.

அமீர்கான் எடுத்தாரே தாரே ஜமீன்பர், அது போல ஒரு சின்ன பையனை மையமாக வைத்து தான் அந்தக் கதை நகரும். ஆனால் அந்தப் படம் இப்போது வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் பேசப்படுகிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மக்கள் நல்ல கதையை எதிர் பார்க்கிறார்கள்.

பொதுவாக எப்போதும் தெலுங்கில் பெரிய ஐட்டம் சாங், சண்டைக் காட்சிகள், பெரிய ஸ்டார்கள் என்று இருந்தால்தான் படம் பார்ப்பார்கள். இப்போது அவை இல்லாமல் கதையைப் பார்க்கிற பழக்கம் தெலுங்கு திரை உலகத்திலேயே வந்துவிட்டது.

அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் நோக்கத்தில் தமிழில் பேச வைத்து எடுத்தார்கள். விரைவில் தமிழில் வெளியாகும்.

நல்ல படமாக இருந்தால் தெலுங்கு ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழ் ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்.

நல்ல படம் எடுத்து தமிழ் ரசிகர்களை நம்பினால் கை கொடுப்பார்கள். நன்றாக இருந்தால் வரவேற்பு தருவார்கள். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார் .

விழாவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.