இருக்கும் வரை பத்திரமாகப் பாதுகாத்து, இறந்தபிறகு யாரோ ஒருவருக்குப் பயன்படும் வகையில் தனது உடலை தானமாக வழங்கியுள்ளார் நடிகர் ‘கயல்’ தேவராஜ்.
அண்மையில் தனது பிறந்தநாளையொட்டி (ஏப்ரல்-9 அன்று 58வது வயது தொடங்கியது) நடிகர் ‘கயல்’ தேவராஜ், தனது உடலையும், கண்களையும் தானம் செய்துள்ளதை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, தன்னுடைய சினிமா வரலாற்றையும் சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
“09-04-1968ல் குடியாத்தம், புதுப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள வாடகை வீட்டில் பிறந்த நான், அங்குள்ள திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் 7ம் வகுப்பு வரை படித்தேன்.
பிறகு வேலூர் அடுத்த வஞ்சூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தேன்.
வேலூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தபோது, சினிமா ஆர்வம் காரணமாக, படிப்பை காலாண்டுத் தேர்வு விடுமுறையுடன் நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்தேன்.
1986 முதல் 1990 வரை கடுமையான போராட்டம். இயக்குநர் கே.பாக்யராஜ், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற முயற்சித்து தோல்வி அடைந்தேன்.
பிறகு பாடல் எழுத முயன்றேன். அதிலும் தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே இருந்தேன். சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும் என்று வெறுத்து, இனி சினிமாவே வேண்டாம் என்று, ஒரு முன்னணி நாளிதழில் நிருபர் ஆனேன். அந்தப் பணியில் வரும் மே மாதம் 31 வருட அனுபவத்தைப் பெறுகிறேன்.
2009 நவம்பர் 27ல், இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணியம் சிவா இருவரும் ‘யோகி’ படத்தில் என்னை குணச்சித்திர நடிகனாக அறிமுகம் செய்தார்கள்.
தொடர்ந்து தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.
‘அழகர்சாமியின் குதிரை’, ‘முத்துக்கு முத்தாக’, ‘நீர்ப்பறவை’, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘முதல் இடம்’, ‘கயல்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘திருநாள்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘சண்டக்கோழி 2’, ‘தேன்’ போன்ற படங்கள் என்னை அடையாளம் காட்டியிருக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த எனது 50வது பிறந்தநாளில், நான் இறந்த பிறகு என் முழு உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்பி, சென்னை மருத்துவக் கல்லூரியில், டாக்டர் சுதா சேஷய்யன் முன்னிலையில், உடல் தானம் அளிப்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டேன்.
பிறகு சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை அனுமதியைப் பெற்று, எனது இரண்டு கண்களை தானம் செய்ய விரும்புவதாக உறுதி அளித்தேன்.
இருக்கும் வரை அனுபவிப்போம். இறந்த பிறகு பிறர்க்கு அளிப்போம். வாழ்ந்து, வாழ வை. அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
நல்லுள்ளம் கொண்டோர் நலத்துடன் வாழ வேண்டும் இன்னும் பல ஆண்டுகள்.
நன்றி: கயல் தேவராஜ் முகநூல் பதிவு.