கே.பாக்யராஜ் இயக்கிய ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் அப்பாவிப் பெண்ணாக நடித்த சுலக்ஷனாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
பலரும் அதுதான் அவரது அறிமுகப் படம் என்று நினைப்பார்கள். ஆனால், அவர் அதற்கு முன்பு 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
சுலக்ஷனா ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர். அவரது தாத்தா சென்னையில் சினிமா பத்திரிகையாளராக இருந்தார்.
தாத்தா வீட்டில் வளர்ந்த சுலக்ஷனா, அவருடன் அடிக்கடி படப்பிடிப்பு செல்வார். அப்படி ஒரு நாள் கே.பாலசந்தரின் ‘காவியத் தலைவி’ படப்பிடிப்புக்கு தாத்தாவுடன் சென்றார்.
ஜெமினி கணேசன், சவுகார் ஜானகிக்கு மகளாக நடித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு சரியாக நடிக்க வரவில்லை.
இதனால் படப்பிடிப்புக்கு வந்திருந்த சுலக்ஷனாவை கூப்பிட்டு நடிக்க வைத்தார். அப்போது அவருக்கு வயது 3.
அதன் பிறகு 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தெலுங்கில் மட்டும் 80 படங்கள். “சுபோதயம்” என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
சுலக்ஷனாவின் இயற்பெயர் ஸ்ரீதேவி. அப்போது ஸ்ரீதேவி முன்னணியில் இருந்ததால் இந்த படத்தை இயக்கிய இயக்குநர் கே.விஸ்வநாத், சுலக்ஷனா என்று பெயரை மாற்றினார்.
அதன்பிறகு கன்னடத்தில் ராஜ்குமார் ஜோடியாக நடித்து அங்கேயும் பிரபலமானார். அதன்பிறகுதான் கே.பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
- நன்றி : தினமலர் சினிமா