கதாநாயகனாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா.
கே.பாக்யராஜிடம் அசிஸ்டெண்டாக வேலை செய்வதிலிருந்து தொடங்கிய எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படைப்பாக வெளிவந்தது அஜித் இரட்டை வேடங்களில் நடித்த ‘வாலி’ திரைப்படம்.
ஒரு தாழ்வுமனப்பான்மை உள்ள ஒரு மனிதன் தன்னுடைய காதலை சொல்லமுடியாமல் தவிக்கும் ஒரு உணர்வை திரைக்கதையாக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக்கினார் எஸ்.ஜே.சூர்யா.
அடுத்து விஜயை இயக்கி ரசிகர்களைக் குஷிபடுத்தினார் எஸ்.ஜே.சூர்யா. அத்திரைப்படம் தான் கதையே இல்லாத ஒரு திரைக்கதையில் காதலின் ஒரு கோணத்தை சொன்ன ‘குஷி’.
கதாநாயகனும் கதாநாயகியும் சண்டை போட்டுக்கொண்டே காதலிப்பதையும்… காதலை யார் முதலில் சொல்வது என்ற போட்டியையும்.. அந்த க்ளைமாக்சையும் வெகுவாக ரசித்தனர் ரசிகர்கள்.
எப்போதும் இளைஞர்களின் மனதை மட்டுமே குறிவைத்து திரைக்கதை எழுதும் எஸ்.ஜே.சூர்யா அடுத்து கையிலெடுத்தது சயின்ஸ் பிக்ஷன் ஜானரான ‘நியூ’ திரைப்படம்.
இத்திரைப்படத்தில் நாயகனும் இவரே. 12 வயது சிறுவன் 28 வயது இளைஞனாக மாறி கல்யாணம் செய்துகொண்டு இரண்டு வாழ்க்கை வாழ்கிறான் என்றாக இருந்த படத்தின் கதை அன்னாளில் தமிழ் சினிமாவிற்கு புதிதாகவே இருந்தது.
நயன்தாராவுடன் கள்வனின் காதலி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி, திருமகன், வியாபாரி என பல திரைப்படங்களில் நடித்த எஸ்.ஜேசூர்யாவிற்கு இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’ திரைப்படம் அவரது மற்றொரு பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதாக அமைந்தது.
தொழில்முறை நடிகரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடுத்து கிடைத்த ஜாக்பாட் ‘மெர்சல்’ திரைப்படம். விஜய்க்கு இணையான ஒரு வில்லன் நடிகரானார் எஸ்.ஜே.சூர்யா. ஒரு தளபதிக்கு அல்ல மூன்று தளபதிக்கு அசுர வில்லனானார் எஸ்.ஜே.சூர்யா.
முன்னணி நாயகர்களுக்கு இணையான ஒரு வில்லன் நடிகர் என்றால் இயக்குநர்களின் சாய்ஸ் எஸ்.ஜே.சூர்யா தான் என மாற்றியது மெர்சல்.
விஜய் என்ற புலியுடன் மல்லுக்கட்டிய எஸ்.ஜே.சூர்யா அடுத்து மான்ஸ்டரில் ஒரு எலியுடன் மல்லுக்கட்டினார்.
செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… சிம்புவுடன் ‘மாநாடு’, சிவகார்த்திகேயனோடு ‘டான்’, விஷாலுடன் சூப்பர்ஹிட் அடித்த ‘மார்க் ஆண்டனி’, ‘இந்தியன்-2, தனுஷின் ‘ராயன்’ என வரிசையாக தன் நடிப்பில் மாஸ் காட்டி வரும் எஸ்.ஜே.சூர்யாவை ‘வந்தார் நடித்தார் வென்றார்’ என தாராளமாக சொல்லலாம்.
– வந்தனா
- நன்றி – நியூஸ் 18