சினிமாவால் பலருக்கும் பெருமை கிடைக்கும், ஆனால் சிலரால் தான் சினிமாவிற்கே பெருமை கிடைக்கும். அப்படி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவிற்கு பெருமை சேர்த்த நடிகர்களில் ஒருவர் ஜெயராம். அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
1965-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி கேரளாவில் உள்ள பெரும்பாவூரில் சுப்பிரமணியம் – தங்கம் தம்பதிக்குப் பிறந்தவர் தான் நடிகர் ஜெயராம்.
பெரும்பாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்துவிட்டு, பின் காலடி ஸ்ரீ சங்கரா கல்லூரியில் பட்டத்தைப் பெற்றார்.
திரையுலகில் மிமிக்ரி கலைஞராக என்ட்ரி கொடுத்த ஜெயராம் 1988ல் பத்மராஜன் இயக்கிய ‘அபரன்’ படம் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.
இப்படத்தில் ஜெயராம் ஒரே நேரத்தில் கதாநாயகன் மற்றும் எதிரி என டபுள் ஆக்ஷனில் அசத்தி விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றார்.
1990-ல் ‘சுபா யாத்ரா’ திரைப்படத்தில் நடிகை பார்வதியுடன் இணைந்து ஜெயராம் நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதன்பின் 1992ஆம் ஆண்டு நடிகை பார்வதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு காளிதாஸ் மற்றும் மாளவிகா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் காளிதாஸ் நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
1996ஆம் ஆண்டு ‘தூவல் கொட்டாரம்’ படத்திற்காக சிறப்பு ஜூரி மூலம் தனது முதல் கேரள திரைப்பட விருதை கைப்பற்றினார் நடிகர் ஜெயராம்.
மலையாளத்தில் கலக்கிக் கொண்டிருந்த ஜெயராம் தமிழில் ‘கோகுலம்’ படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார். அதன்பின் மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் ‘துப்பாக்கி’, ‘உத்தம வில்லன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை, சீரியஸ் என எந்தவிதக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பட்டையைக் கிளப்புவார். மோகன்லால், மம்மூட்டி, கமல் ஹாசன், விஜய் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயராம் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல பின்னணிப் பாடகரும்கூட. அதுமட்டுமின்றி மிமிக்கிரி கலைஞர், செண்டை தாள வாத்தியக்காரராகவும் ரசிகர்களால் அறியப்படுகிறார்.
பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழாவில் இயக்குநர் மணி ரத்னம் மற்றும் நடிகர் பிரபு போல் பேசிய அசத்தினார். அதுவே இவருடைய மிமிக்கிரி திறமைக்கு மிகப்பெரிய சான்றாகும்.
ஜெயராம் பெற்ற விருதுகள்:
‘தூவல் கொட்டாரம்’ – 1996 படத்திற்காக சிறப்பு ஜூரியில் கேரள மாநில அரசின் திரைப்பட விருது
‘ஸ்வயம்வர பந்த’ – படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது
2011 ஆம் ஆண்டில் நடிகர் இந்திய திரைப்படத் துறையில் அவரது நம்பமுடியாத பங்களிப்பிற்காக இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.
நன்றி: சினி உலகம்.