Take a fresh look at your lifestyle.

சிரஞ்சீவியின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அஜித்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதேபோல் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பர’ படத்தின் படப்பிடிப்பும்  ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் த்ரிஷா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் பீரியட் ஃபேன்டஸி படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், அஜித்குமார் திடீரென ‘விஸ்வம்பர’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிரஞ்சீவியைச் சந்தித்துள்ளார். அந்த படங்களை சிரஞ்சீவி சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படங்களை இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்ததுடன் தனது கருத்தை சிரஞ்சீவி இவ்வாறு எழுதியுள்ளார். “விஸ்வம்பரா செட்டில் ஒரு ஆச்சரியமான நட்சத்திர விருந்தினர் வந்திருந்தார். மிகவும் அன்பானவர். அவரது முதல் படத்தை அன்புடன் நினைவு கூர்ந்து சிறிது நேரம் செலவிட்டோம்.

அவருடைய மனைவி ஷானிலி என் படத்தில் அன்பான குழந்தைகளில் ஒருவராக நடித்திருந்தார். பல வருடங்களாக அஜித் அடைந்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பர’வும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்