Take a fresh look at your lifestyle.

எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல எனச் சொல்லும் படம்!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

வாழ்வில் எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரி ஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம் மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை P.C. சிவன். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருக்கிறார். எடிட்டிங் வித்து ஜீவா.

இத்திரைப்படத்தை, 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வெற்றி கொடி நாட்டிய, மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஆரூத்ரன் லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின், மற்றொரு அங்கமான, ஆரூத்ரன் பிக்சர்ஸ் சார்பில் S. முருகன் தயாரித்து, வழங்குகிறார்.

படபிடிப்பு திருச்சி, மதுரை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.