Take a fresh look at your lifestyle.

இளம் இசையமைப்பாளர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள்!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

இதில் பேசிய இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், “இப்போது அனிருத் நன்றாக இசையமைக்கிறார். இவ்வளவு பெரிய படத்துக்கு ஹிட் கொடுக்கிறார். 10000 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அதில் நிலைத்து நிற்பது என்றால் திறமை இல்லாமல் நடக்காது. அதெல்லாம் செய்துவிட்டு “தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான்” என்று சொல்லும் அந்தப் பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது. உங்களுடைய வெற்றிக்குப் பாராட்டுகள்.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். க்ளாசிகல் இசை படித்துவிட்டு, அதில் நீங்கள் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால் இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய் சேரும்” என்று குறிப்பிட்டார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.