பாலா – 25 & வணங்கான் இசை வெளியீடு; கோலாகலமாக நடந்த இருபெரும் விழா!
1999-ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா.
தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வணங்கான்’ இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி. ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன், நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர். கே.கிரண் (ஆர்ட் டைரக்டர்).

தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன்.
நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவை அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். அடுத்து வந்த தப்பாட்டம் அரங்கை அதிரவைத்து அடங்கியது.
அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “சினிமாவில் சாதனை படைத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்றவர்களை நாம் பாராட்டவில்லை. இனிமேலாவது நாம் எல்லோருக்கும் விழா எடுத்துப் பாராட்டத் தொடங்கவேண்டும்” என்று சுருக்கமாகப் பேசினார்.
நிகழ்வின் இடையே தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் இயக்குநர் பாலாவுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
பொன்னாடையுடன் மேடையேறிய தயாரிப்பாளர்கள் தாணு, தியாகராஜன், கதிரேசன், சிவா, தனஞ்ஜெயன் போன்றவர்கள் பாலாவின் இயக்கத்தைப் பற்றியும் அவரது கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசினார்கள்.
அடுத்து பாலாவுடன் கதை விவாதங்களில் ஈடுபட்ட பவா செல்லதுரை, சிங்கம்புலி, அஜயன் பாலா, யூகி சேது ஆகியோரை இயக்குநர் மிஷ்கின் சுவாரசியமான கேள்விகளுடன் பேட்டி எடுத்தார்.
விழா தொடங்கிய சில நிமிடங்களில் பரபரப்பாக அரங்கிற்குள் நுழைந்தார்கள் சிவகுமாரும் சூர்யாவும். முதலில் சூர்யா பேச அழைக்கப்பட்டார். அப்போது நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்கச் செயினை அணிவித்து மகிழ்ந்தார். இயக்குநர் பாலாவின் மீதான பேரன்பையும், நன்றியையும் தன் பேச்சில் சூர்யா நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.
நடிகர் சூர்யா, “அண்ணன் பாலாவின் ‘சேது’ திரைப்படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? ஒரு இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்கமுடியுமா என்று நினைத்தேன். பல நாட்கள் சேதுவின் தாக்கம் இருந்தது.
அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. 2000 ஆம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கையே இருந்திருக்காது.
‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன்பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலாதான்.
உறவுகளுக்கு தனது படங்களில் பாலா மதிப்புக் கொடுப்பார். பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உறவு. நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு என்னுடைய அன்பும், மரியாதையும். ‘வணங்கான்’ முக்கியமான படமாக இருக்கும்” என்று உருக்கமாகப் பேசினார் சூர்யா.
சூர்யா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பாலாவிடம் அர்ச்சனா கேட்க, மிகுந்த தயக்கத்துடன் ஓர் அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார். “சூர்யா முன்னே நான் சிகரெட் பிடிக்கமாட்டேன். தம்பி வருத்தப்படுவான். ஒருமுறை படப்பிடிப்பில் மறைந்து சிகரெட் குடித்தேன்.
ஆனால் படப்பிடிப்பில் எத்தனை முறை சிகரெட் குடித்தேன் என்று நினைவு வைத்து கேட்பான். என் உடம்பு மேல என்னைவிட அவனுக்கு அக்கறை அதிகம்” என்று நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் பாலா.
நடிகர் சிவகார்த்திகேயன், “சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பைக் கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
‘அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்மறை முடிவாக இருக்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்மறை முடிவுடன் வந்து ஹிட் அடித்தது என்றும் சொன்னார்கள்.. அதே போல தான் நடந்தது.
அவருடைய ‘அவன் இவன்’ பட விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் என் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் தம்பி என கூப்பிட்டார்.
எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
நடிகர் சிவகுமார், “பாலா சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதும் ‘சேது’ படத்தில் அவர் வைத்த ஷாட்டுகள் எல்லாம் எனக்கு அப்படியே நினைவில் இருக்கின்றன.
கிளைமாக்ஸில் விக்ரமின் கையை நான் பிடிக்கும்போது அவர் தட்டி விட்டு செல்வார்.
அப்போது நான் நிமிர்ந்து பார்ப்பேன். அந்தக் காட்சியை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது” என்றார் சிவகுமார்.