விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், ‘எனைச் சுடும் பனி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.
இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோர் நடிக்கிறார்கள்.
நட்ராஜ் சுந்தர்ராஜ், உபாசனா ஆர்.சி இருவரும் பக்கத்து பக்கத்து வீடு. நட்பாக, காதலாகப் பழகுகிறார்கள். கதாநாயகி வேலைக்குச் செல்லும் பொறுப்பான பெண். கதாநாயகன் ஜாலியாக இருக்கும் இளைஞன்.
ஐபிஎஸ் அதிகாரி தேர்வுக்குத் தயாராகி வருகிறார் கதாநாயகன். இந்த நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள்.
துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. ஒரு பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்படுகிறது.
அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் நீதி கேட்டு போராடுகிறார்கள். போலீஸ் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறது.
எதிர்பாராத விதமாக விசாரணை வளைக்குள் கதாநாயகன், கதாநாயகி இருவரும் சிக்குகிறார்கள். விசாரணை தொடங்குகிறது. சைக்கோ, கிரைம், திரில்லர், சஸ்பென்ஸ், லவ் என ‘எனைச் சுடும் பனி’ விறுவிறுப்பாக செல்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம் ஷேவா இயக்குகிறார். ஒளிப்பதிவு வெங்கடேஷ், இசை அருள்தேவ், சண்டைப் பயிற்சி டேஞ்சர் மணி, படத்தொகுப்பு சி.எம். இளங்கோவன், கலை நிர்மாணம் சோலை அன்பு, நடனம் சாண்டி, ராதிகா, பாடல்கள் ராம் ஷேவா, சரவெடி சரண், வசந்த். நிர்வாக தயாரிப்பு ஜீவா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு ஹேமலதா சுந்தர்ராஜ்.
தயாரிப்புப் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், விரைவில் எனைச் சுடும் பனி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.