Take a fresh look at your lifestyle.

தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் பி.எஸ்.வீரப்பா.

‘ஹா…ஹா… ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான் முதன்முதலாக இந்த இடிச்சிரிப்பை பி.எஸ்.வீரப்பா வெளிப்படுத்தினார். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பால், பின்னர், அதுவே அவரது தனி முத்திரை ஆனது. 

1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ என்ற படத்தில் வீரப்பா அறிமுகமானார். 1946-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் வீரப்பாவும் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை நீடித்தது.

எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ உட்பட பல படங்களில் வீரப்பா நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாம்’ படத்தை ஜூபிடர் பிக்சர்ஸுடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்துக்கு திரைக்கதை, வசனம் கருணாநிதி. படத்தில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு வீரப்பாவை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார்.

வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன.

எம்.ஜி.ஆர். நடித்து 1957-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாதேவி’ படத்தில் ‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற வீரப்பாவின் வசனம் இன்றளவும் பிரபலம்.

அந்தப் படத்தில் வீரப்பாவின் பெயர் கருணாகரன். சந்தர்ப்பவசத்தால், வீரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, இளவரசியாக வரும் நடிகை எம்.என்.ராஜத்தை அவருக்கு கட்டாயமாக திருமணம் செய்துவைத்து விடுவார்கள்.

திருமணம் முடிந்து வீரப்பாவை ‘‘அத்தான்…’’ என்று எம்.என்.ராஜம் அழைப்பார். ஆத்திரத்தை அடக்கியபடி வேதனை கலந்த சிரிப்போடு வேண்டா வெறுப்பாக, ‘‘அப்படிச் சொல்… சத்தான இந்த வார்த்தையிலே கருணாகரன் செத்தான்’’ என்று வீரப்பா கூறும்போது தியேட்டரில் எழும் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும்.

படங்களில் வாள் வீச்சில் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுத்து வீரப்பா சண்டையிடுவார். எம்.ஜி.ஆரிடம் உள்ள ஒரு விசேஷ குணம், எந்த பாத்திரத்தில் எந்தக் காட்சியில் நடித்தாலும் சரி சுற்றிலும் நடப்பவற்றில் ஒரு கண் வைத்திருப்பார்.

‘ஜெனோவா’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆருக்கும் வீரப்பாவுக்கும் ஆக்ரோஷமான வாள் சண்டை.

இந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளத்தில் உருண்டுவிழ இருந்த வீரப்பாவை எம்.ஜி.ஆர். பிடித்து இழுத்து சரியான நேரத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்தார். இதை வீரப்பா பலமுறை நன்றியோடு கூறியுள்ளார்.

‘விக்கிரமாதித்தன்’ படத்தில் வீரப்பாவை கொல்ல வரும் கூட்டத்திடம் இருந்து அவரை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார்.

அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி வீரப்பா விசாரிப்பார். விவரங்களைத் தெரிந்து கொண்டபின், அவர் சொல்லும் வார்த்தைகளால் தியேட்டரில் எழும் கரவொலியால் காது கிழியும்.

எம்.ஜி.ஆர். பற்றி வீரப்பா சொல்வார்… ‘‘உலகத்துக்குத் தேவையான மனிதர்!’’

– நன்றி: முகநூல் பதிவு