Take a fresh look at your lifestyle.

மீண்டும் இயக்குநராகும் ரேவதி!

தமிழ்த் திரையுலகில் 80-களில் முன்னணிக் கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரேவதி. இவரது நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ‘மண்வாசனை’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், கை கொடுக்கும் கை, ஆகாயத்தாமரை, பகல் நிலவு, ஆண் பாவம், உதய கீதம், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரேவதி.

இத்துடன் அனைத்து மொழிப் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

80 மற்றும் 90-களில் இருந்த நடிகைகளில் இவர் மட்டும் தான் சிறந்த நடிகை என ஐந்து முறை பிலிம்பேர் விருது வாங்கியுள்ளார்.

இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களும் இயக்கியுள்ளார் ரேவதி.

தற்போது மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். தமிழில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். அதைக் குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் இணை இயக்குநராக சித்தார்த் ராமசாமி பணியாற்றியுள்ளார். இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு கடந்த 5-ம் தேதி தொடங்கியுள்ளது. 

இந்த வெப் சீரிஸ் ஓடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார் நடிகை ரேவதி.