Take a fresh look at your lifestyle.

காதல் – காமெடி கலந்த ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’!

அறிமுக இயக்குநர் G. ராஜசேகர் இயக்கத்தில், த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ், காமெடி திரைப்படம் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் G. ராஜசேகர் அருண், விஸ்யூவல்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் V. M.R.ரமேஷ், R. அருண் ஆகியோரிடம் நான் கதை சொல்லப் போனபோது, இளைஞர்கள் ரசிக்கும் கதை கேட்டார்கள்.

இந்தக் கதை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்கள். த்ரிகுனை நாயகனாகப் போடலாம் என அணுகினேன், அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா என ஒரு நல்ல குழு கிடைத்துள்ளது.

இந்தக் கால ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு அருமையான படமாக இப்படம் இருக்கும்.

படம் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்படப் பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. என் கதையை ஒப்புக்கொண்டு, அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி.

நடிகை இனியா, இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல் மூவி, என் மூன்று படங்கள் இந்த வாரம் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து நல்ல விசயங்கள் நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நந்தினி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன், நல்ல பாத்திரம்.

மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளோம், ஸ்வீட்டி நாட்டி கிரேஸி யார் யார் என படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு பெண் ஒளிப்பதிவாளர் பணியாற்றியது எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப் படங்கள் செய்ய ஆசை. த்ரிகுன் முதலில் அவரை தெலுங்குப் பையன் என நினைத்தேன், ஆனால் அவர் கோயம்புத்தூர் பையன். அழகாக நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் வருகிறது. எல்லோரும் விரும்பி வேலை பார்த்துள்ளோம். ராஜசேகர் சார் ஃபர்ஸ்ட் படம், செம்ம ஃபன்னாக படம் எடுத்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும்படி கலகலப்பாக இருக்கும் நன்றி என்றார்.

நாயகன் த்ரிகுண், ரொம்ப நாஸ்டாஜியாவாக இருக்கிறது. எனக்கு ஊர் கோயம்புத்தூர் தான், ஜர்னலிசம் படிச்சேன், பிரகாஷ் ராஜ் கண்ணில் பட்டு, இனிது இனிது படம் செய்தேன்.

காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் சார் இசையமைத்த டெவில் படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

நான் தெலுங்கில் பல படங்கள் செய்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும் போது, வருத்தமாக இருக்கும், அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அந்த நேரத்தில் தான் ராஜசேகர் சார் கதை சொன்னார். அவர் தயங்கி தயங்கி கதை சொன்னார், இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அழ வைக்க வேண்டும், இல்லை சிரிக்க வைக்க வேண்டும், இப்போது நான் சீரியஸ் படங்கள் தான் செய்து வருகிறேன், அதனால் கண்டிப்பாக இந்தப்படம் செய்யலாம் என சொன்னேன்.

இப்படத்திற்காக ஈசிஆரில் பாடல் ஷீட் செய்தோம் அதே இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன், இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி.

இப்படத்தில் விஜய் ஶ்ரீ மேடம் செம்ம சூப்பராக வேலை பார்த்துள்ளார் அவருக்கு நன்றி.

ராஜசேகர் சார் மிக கடினமான உழைப்பாளி, இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் அருண், நானும் நண்பர் ரமேஷும் அருண் ஈவண்ட்ஸ் சார்பில், நிறைய ஈவண்ட்ஸ் நடத்தியுள்ளோம், ஒரு நாள் என் நண்பர் ரமேஷ் நாம் ஏன் ஒரு நல்ல கமர்ஷியல் படம் செய்யக்கூடாது எனக் கேட்டார்.

உடனே சரி சார் என்றேன். அப்போது தான் உளவுத்துறை படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் வந்து, என் உதவி இயக்குநர் நல்ல கதை வைத்துள்ளார் என்றார்.

அவர் மனது எனக்குப் பிடித்திருந்தது. அவரே இந்தப்படத்தைச் செய்திருக்கலாம் ஆனால் அவர் துணை இயக்குநருக்கு வாய்ப்பு கேட்டார்.

இந்தக் காலத்திற்கு உள்ளத்தை அள்ளித்தா படம் போல வேண்டும் என்றோம், அட்டகாசமான படமாகத் தந்துள்ளார்கள். சிரித்து சிரித்து கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும்.

மூன்று கதாநாயகிகள் மூவருக்கும் கொஞ்சம் கூட ஈகோவே இல்லை, இப்படத்தில் நிறையச் செலவு செய்து பல அற்புதமான இடங்களில் ஷூட் செய்துள்ளார்கள்.

அருணகிரி சார் ஒரு பாடலை 2 மணி நேரத்தில் முடித்தார். இசை உங்களை மயக்கும். எங்க ஹீரோ அற்புதமானவர். இளைஞர்களுக்கான செம்ம ஜாலியான படம். எப்போதும் எங்களுக்குத் துணையாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் நடந்த உரையாடலில்..

த்ரிகுன் தமிழில் ஏமி ஜாக்சனுக்கு புருஷனாக நடித்தது, நீங்கள் மட்டும் தான் அதை ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்? எனும் கேள்விக்குப் பதிலளிக்கையில்…

ஆம் நடித்துள்ளேன் ஆனால் அதெல்லாம் பெருமை இல்லையே, அப்போது நடித்தேன், அவர் பெரிய நடிகை மகிழ்ச்சி தான், அதைத் தாண்டி எனக்கு என ஒரு பெயரை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறேன். தெலுங்கைப் போல தமிழிலும் வளர வேண்டும்.. என்றார்.

மூன்று ஹீரோயின்கள் ஈகோ சண்டை ஏதும் வரவில்லையா ? எப்படி சமாளித்தீர்கள் ?

அதைத் தான் சார் படமாக எடுத்திருக்கிறோம், மூன்று பெண்களிடம் மட்டும் ஹீரோ படாதபாடு படுவதுதான் கதை, மற்றபடி இவர்கள் எல்லோரும் இனிமையானவர்கள்.

ஹீரோயின் கொஞ்சம் குண்டாகிவிட்டாலே அம்மா கேரக்டர் தான் வரும், நீங்கள் எப்படி ஹீரோயினாக நடிக்கிறீர்கள் எனும் கேள்விக்கு சுந்தரா டிராவல்ஸ் ராதா பதிலளிக்கையில்…

ஒரு ஹிரோயினை அப்படி எல்லாம் சொல்லிவிட முடியாது, ஒவ்வொருவருக்கும் ஒரு உடல்வாகு இருக்கிறது.

அதை நாம் மாற்ற முடியாது. ஹீரோயினாக இயக்குநர் தந்த வாய்ப்பு தான் இது. படம் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.