Take a fresh look at your lifestyle.

விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘கோட்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைp பயன்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் ‘படைத்தலைவன்’, விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ போன்ற படங்களிலும் இதே தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ்த் திரை உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தி இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் வெளியாகி வருகின்றன. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்தியிருப்பதாக இதுவரை யாரும் எங்களிடத்தில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே அனுமதி இல்லாமல் பத்திரிக்கை செய்திகள், ஊடகச் செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதைத் தவிர்த்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தேமுதிக அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

– நன்றி: தினமணி