Take a fresh look at your lifestyle.

இளையராஜாவுடன் 4000 பாடல்களில் பணியாற்றிய அனுபவம்!

பேஸ் கிடாரிஸ்ட் சசிதரன் உருக்கம்

இசைஞானி ஜீவாம்மா தம்பதியரின் அழும் குழந்தையை (கார்த்திக் ராஜா) சமாதானப்படுத்த அருகில் இருந்த கிடாரை எடுத்து விரலால் சும்மா ஒரு ஸ்டிரிங்கிட்டு ஆரம்பித்தவர்.

குழந்தையை விளையாட்டு காட்ட ஆரம்பித்த கருவியே பின்னர் தனக்கு ஒரு முகவரியை தேடித்தரும் என அன்று அறிந்திருக்க மாட்டார்.

“How to play Guitar” என்ற புத்தகத்தை வாங்கி படித்தும், தங்கதுரை சாமுவேலிடம் முறைப்படி கிடாரை கற்றுக் கொண்டாலும் விடாமுயற்சியும் பேஸ்கிடாரின் மேல் கொண்ட காதலும் பேஸ்கிடாரிஸ்ட் என்ற பெயரை இசைஞானி இசைக்குழுவில் பெற்று தந்தது.

பல லைட் மியூசிக், சில இசை இயக்குனர்கள் என பேஸ் கிடாரிஸ்டாக பணிபுரிந்திருந்தாலும், முதன் முதலில் இசைஞானியின் பைரவி படத்தில் வரும் நண்டூருது நரியூருது பாடலின் மூலம் பேஸ்கிடாரிஸ்டாக அவதானிக்கப்பட்டவர்.

ப்ரியா படத்தின் பேக் கிரவுண்ட் ஸ்கோரில் இசைஞானியால் பிள்ளையார் சுழி போடப்பட்டு பேஸ்கிடாரிஸ்டாக பட்டை தீட்டப்பட்டு ஜொலித்தவர்.

பொதுவாக மேற்கத்திய இசைகள் மற்றும் மேற்கத்திய விழாக்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பேஸ்கிடார் இசைஞானியின் அலங்கரிக்கப்பட்ட இசை கதம்பத்தில் சசி அண்ணாவின் கைவண்ணமும் இணையப்பெற்றது பேஸ்கிடாரால்.

காதல் ஓவியம் பாடும் காவியம், பொட்டு வைத்த ஒரு, கொடியிலே மல்லிகை பூ, சின்ன சின்ன வண்ண குயில், உன்னை நினச்சேன் பாட்டு, போட்டு வைத்த காதல் போன்ற பாடல்களை பேஸ் கிடார் ஸ்டிரிங்கில் அதிர வைத்தவர்.

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா என்ற பாடலின் பின்னணி பேஸ் கிடாரின் பெருமையை பேச ஒரு நாளே ஆயிரும்.

இது போன்று தோராயமாக 4000 பாடல்களுக்கு மேல் வாசித்த உன்னதக் கலைஞர். சாலச்சிறந்த உதாரணமாக கொடியிலே மல்லிகை பூ, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, உன்னை நினச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே பாடல்கள் சசி அண்ணாவின் பேஸ்கிடாரில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

கங்கை அமரனுடன் இவர் பணிபுரிந்த வாழ்வே மாயம், மௌன கீதங்கள் படங்கள் காலத்தால் காவியமானவை.

ஒரு சேசிங் காட்சிக்கு தபெலா, வயலின், மிருதங்கம், டிரம்ஸ்… இப்படி கருவிகளை பல படங்களில் பயன்படுத்தி பார்த்திருப்போம்… ஆனால் டிக் டிக் டிக் படத்தில் ரொமாண்டிக்கான சேசிங்கிற்கு பேஸ் கிடாரை பயன்படுத்தி இருப்பாரு இசைஞானி.

(டிக் டிக் டிக் படம் உதாரணத்திற்காக சொல்லப்பட்டது. இது போல இசைஞானியின் இசையில் பல படங்கள் உண்டு). மாதவி நீச்சல் குளத்தில் குளிக்க ஆடையை களையும்போது ஒளிந்திருந்து கேமராவால் அதை கிளிக் செய்வார் கமல்.

இதைக் கண்ட மாதவி தேடிச் செல்லும்போது கமலை கண்டு கோபம் கொண்டு “யூ.. யூ.. யூ..” என கோபம் கொள்ள, கமல் “கலைக்கண்ணோட பார்த்தேன்” என்று சொல்ல, மாதவி கமலை திட்டிக்கொண்டே துரத்த… பின்னணியில் பேஸ் கிடாரின் ஜாலம் தொடங்கும்… ஒரு கட்டத்தில் கமல் கீழே விழ, மாதவி கமலில் மேல் சரிய… அப்ப கமல் மாதவியை பார்த்து கண் சிமிட்டும் போது அதற்கு பின்னணியில் “டொய்ங்” என பேஸ் கிடாரால் ஸ்டிரிங்கிட்டிருப்பாரு..

பின் மாதவி கையை தன் கையால் பிடித்து ஒவ்வொரு விரலால் தொடும் போதும், பேஸ் கிடாரால் ஒவ்வொரு விரலுக்கும் ஸ்டிரிங்கால் ஸ்பரிசித்திருப்பார். அப்படியே அனைத்து விரலையும் சேர்த்து ஒரு சேர வீணை போல விளையாடி இருப்பார் பேஸ் கிடாரால்…

தேவராஜன் மாஸ்டர், ராஜன் நாகேந்திரா, ஷ்யாம், சலீல் சவுத்ரி, தேவா, போன்ற இசை அமைப்பாளரிடம் பணிபுரிந்திருந்தாலும், எலக்ட்ரானிக் பேஸ் கிடாரே அதிகம் உபயோகப்படுத்தாத இசைமேதை நவ்ஷாத்திடம் பிரசாத் டீலக்ஸில் ஒரு மலையாள படத்திற்காக பணிபுரிந்தது தன் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியமாக கிடைக்கப் பெற்றவர்.

யுவன்ஷங்கர்ராஜா கார்த்திக் ராஜா இருவரின் தாய் மாமனாகவும் அவர்களின் இசையில் நல்ல பேஸ்கிடார் கலைஞராகவும் வாசித்த சிறப்பு பெற்றவர்.

இசைஞானியின் அக்கா மகனாகவும், ஜீவா அம்மாவின் உடன் பிறந்த சகோதரருமாகவும், ஒரு நல்ல பேஸ் கிடாரிஸ்டாக இருந்தாலும் ஒரு நல்ல மனிதம் கொண்ட அனைத்து இசை பிரியர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட ஒரு கலைஞர் சசிதரன் அண்ணா.

இன்று (31.01.2024) அண்ணாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் புகழை போற்றி வணங்குகிறேன்.

நன்றி: கண்ணன் நடராஜனின் பேஸ்புக் பதிவு